திருவண்ணாமலை குகை நமசிவாயர்

தமிழகத்தில் உள்ள பல மலைகளில் சித்தர்கள் வாழ்ந்து வருகிறார்கள் அதில் தனித்துவம் வாய்ந்த மலை திருவண்ணாமலை. சிவபெருமானே மலையாக வீற்றிருப்பதால் சித்தர்கள் பலரை ஈர்க்கும் தலமாக திகழ்கிறது. அங்கு வாழ்ந்த சித்தர்களில் சிலர் மட்டுமே ஜீவா சமாதி அடைந்துள்ளனர். அவர்களில் இன்றும் புகழப்படுபவர் குகை நமசிவாயர்.

சித்தர்களின் புகழிடம்

சித்தர்களின் தவ பூமியாகத் திகழும் இந்த மலையில் கண்ணுக்கு தெரியாத நூற்றுக்கணக்கான சித்தர்கள் உள்ளனர். அவர்கள் ஈசனிடம் அருள்பெற்று, பக்தர்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்கள். சில சமயங்களில் அந்த சித்தர்கள் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதும் உண்டு. திருவண்ணாமலை அது மலை மட்டுமின்றி ஆலயமும் சித்தர்கள் ஆசி நிறைந்த இடமாக கருதப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே திருமஞ்சன கோபுரம் அருகே பதினெண் சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் சித்தர் ஒளிதேகம் பெற்ற இடம் அமைந்துள்ளது.திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தர்களில் சிலர் மட்டுமே ஜீவ சமாதி பெற்றுள்ளனர். மற்றவர்கள் அரூப நிலையில் உள்ளனர். இவர்கள் அனைவருமே கிரிவலம் செல்ல வேண்டும் என்பதை மட்டுமே பிரதானமாக வலியுறுத்தினார்கள். 

குகை நமசிவாயர்

கர்நாடகாவில் மல்லிகார்ச்சுனம் என்ற ஊரில் குகை நமசிவாயர் பிறந்தார். ஒருநாள் இவர் கனவில் தோன்றிய அண்ணாமலையார், ‘‘திருவண்ணாமலைக்கு வா’’ என்று அழைத்ததை ஏற்று நமசிவாயர் புறப்பட்டு வந்தார். தன் சீடர்கள் 300 பேருடன் அவர் புறப்பட்டார். வரும் வழியில் நமசிவாயர் ஒரு வீட்டில் திருமணம் நடப்பதைக் கண்டார். அவ்வீட்டினர் நமசிவாயரை ஆசி வழங்கும்படி வேண்டினர். அவ்வீட்டாருக்கு திருநீறு கொடுத்தார். அவர்கள் திருநீறைப் பூசிய போது, அவ்வீட்டில் தீப்பிடித்தது. தீப்பிடிப்பதற்கு நமசிவாயரின் வருகையே காரணம் என அவர்கள் நினைத்தனர். ஆனால், நமசிவாயர், தன் அருட் சக்தியால் எரிந்த பொருட்களை மீண்டும் வரவழைத்தார். 

பரமசிவன் அருளிய மாலை

சீடர்களுடன் அவர் பூந்தமல்லியை வந்தடைந்தார், அங்குள்ள கோவில் நந்தவனத்தில் மலர்ந்திருந்த பூக்களைப் பறித்து வரும்படி தமது சீடர்களை அனுப்பினார். அந்த பூக்களை மாலையாக்கி சிவனுக்கு அணிவித்தார். உரியவரைக் கேட்காமல், பூப்பறித்தது குற்றம் என கோவில் நிர்வாகத்தினர் ஆட்சேபம் தெரிவித்தனர். பறித்த பூக்கள் எல்லாம் சிவனுக்காகவே அணிவிக்கப்பட்டன. ஒரு பூ கூட வீணாகவில்லை, என்று நமசிவாயர் விளக்கம் தந்தார். அதற்கு கோவில் நிர்வாகிகள் உம் வார்த்தை உண்மையானால், சிவனுக்கு அணிவித்த மலர்மாலை உங்கள் கழுத்தில் வந்து விழுமா, என சவால் விட்டனர். நமசிவாயரும் பக்தியுடன், நற்றுணையாவது நமச்சிவாயவே என்று பக்தியுடன் வணங்கினார். அனைவரும் அதிசயிக்கும்படி மலர் மாலை நமசிவாயரின் கழுத்தில் வந்து விழுந்தது.

அருணாசலா நீ சுகம் தானே

சிலகாலம் கழித்து, நமசிவாயர் சீடர்களுடன் திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். திருவண்ணாமலையில் இருந்த ஒரு குகையில் வசிக்கத் தொடங்கினார். அதன்பின், அவருக்கு குகை நமசிவாயர் என்ற பெயர் சூட்டப்பட்டது. குகை நமசிவாயர் தினமும் குகையை விட்டு அதிகாலையில் வெளியே வருவார். மலையைச் சுற்றி கண்ணோட்டம் விடுவார். ‘‘அருணாசலா நீ சுகம் தானே’’ என உரக்கக் கேட்பார். “சுகம், சுகம்’’ என மலை எதிரொலிக்கும். ஆனால் ஈசன் தரிசனம் அவருக்கு ஒருநாளும் கிடைக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த குகை நமசிவாயர் ஒரு நாள் இரக்கமற்ற அருணாசலா நீ மட்டும் சுகமாயிரு என்று குமுறலுடன் கூறினார்.
அண்ணாமலையார் மீது குகை நமசிவாயர் பல பாடல்களைப் பாடினார். நல்ல கவிகளை இயற்றும் புலமையும், வெண்பா பாடுவதில் வல்லமையையும் அவருக்கு அண்ணாமலையார் வழங்கினார். அருணகிரி அந்தாதி, சாரப் பிரபந்தம், திருவருணை தனி வெண்பா, அண்ணாமலை வெண்பா போன்றவைக் குறிப்பிடத்தக்கவை. அண்ணாமலையாரை மனதார தரிசிப்பதும், பூஜைக்குப் பூமாலைகள் கட்டித் தருவதும் நமசிவாயரின் அன்றாடப் பணிகளாக இருந்தன. இவருடைய சீடர்களுள் விரூபாட்சி தேவரும், குரு நமசிவாயரும் முக்கியமானவர்கள் ஆவர். 

இறந்தவரை உயிர்ப்பித்த அதிசயம்

ஒருநாள், அண்ணாமலையாரை தரிசித்துவிட்டு, குகைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் அழுதபடியே அவரை நோக்கி ஓடி வந்தாள். சுவாமி! அபலையான என்னைக் காப்பாற்றுங்கள். என் கணவர் திடீரென்று இறந்துவிட்டார். வாழும் வழி தெரியாமல் நிர்கதியாய் இருக்கும் எனக்கு, உங்களை விட்டால் வேறு துணையில்லை, என்று பாதங்களில் விழுந்தாள். இரக்கப்பட்ட குகை நமசிவாயர், கலங்காதே! அண்ணாமலையார் துணையிருப்பார். உன் கணவர் சிவனருளால் உயிர் பெறுவார். வீட்டுக்கு நிம்மதியாகச் செல்.  எல்லாம் நல்லபடியாய் நடக்கும் என்று ஆறுதல் கூறி வழி அனுப்பினார். அதன்படியே, அவளது கணவரும் உயிர் பெற்று எழுந்தார். குகை நமசிவாயர் மூலம் அண்ணாமலையாரின் புகழ் நாட்டின் நாலாபுறமும் பரவியது. இதனால் அவருக்கு சிறப்பு செய்யும் வகையில் இன்றும் உற்சவ காலங்களில் அண்ணாமலையார் வீதி வலம் வரும்போது அவரது தேருக்கு பின்னே குகை நமசிவாயரும், விரூபாட்சித் தேவரும் தனி தனி பல்லக்குகளில் வலம் வருகிறார்கள். 

முதலில் வீதியுலா செல்லும் குகை நமசிவாயர் தேர்

ஒருதடவை அண்ணாமலையார், ‘‘குகை நமசிவாயர் வருகிறாரா என்று திரும்பி திரும்பிப் பார்த்து கழுத்து வலிக்கிறது. எனவே குகை நமசிவாயர் முதலில் செல்லட்டும்’’ என்றாராம். அன்று முதல் உற்சவ வீதி உலாக்களில் குகை நமசிவாயர் தேர் முதலில் செல்வது குறிப்பிடத்தக்கது.  குகை நமசிவாயர் மீது அண்ணாமலையார் காட்டிய அன்புக்கு இவையெல்லாம் உதாரணமாக உள்ளன. ஒருதடவை குகை நமசிவாயர் ஜீவசமாதி ஆக நினைத்த போது மேலும் 100 ஆண்டுகள் வா-ழ அண்ணாமலையார் அவருக்கு ஆயுளை நீட்டித்தாராம்.

திருமணம்

ஒரு கட்டத்தில், தான் இதுவரை வாழ்ந்தது போதும் என்று குகை நமசிவாயர் தீர்மானித்தார். எனவே, அண்ணாமலையாரிடம் சென்று தான் ஜீவசமாதி ஆக விரும்புவதாகவும், தன்னை ஏற்றுக் கொள்ளுமாறும் வேண்டினார்.  அதற்கு அண்ணாமலையார், நமசிவாயா… எல்லாம் சரிதான். உன் காலத்துக்குப் பிறகு பூஜை செய்வதற்கு ஒரு வாரிசு வேண்டாமா? திருமணம் செய்து கொள்ள அருள் புரிந்து ஏற்பாடு செய்தார். ஸ்ரீசைலத்திலிருந்து குகை நமசிவாயரின் மாமன் மகளை வரவழைத்து இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தார். சில காலத்திற்கு குகை நமசிவாயருக்கு முதல் வாரிசு பிறந்தது. ஈசனின் விருப்பப்படி வாரிசு பிறந்தாயிற்றே! எனவே அண்ணாமலையாரின் ஒப்புதலின் பேரில் தான் வாழ்ந்த குகையிலேயே ஜீவசமாதி அடைந்தார். 

குருபூஜை

இவருக்கு அவரது பரம்பரையில் வந்தவர்கள் தொடர்ந்து வழிபாடு நடத்தி வருகிறார்கள். அவர் எழுதிய பாடல்களில் திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் வழியில் அண்ணாமலையார் ஆலயத்துக்கு நேர் பின்புறம் பேகோபுரத் தெரு அருகே உள்ள சிறு தெரு வழியாக சுமார் ஐந்து நிமிடம் நடந்து சென்றால், மலை தெரியும். அந்த மலையின் மையத்தில் ஒரு சிறு ராஜகோபுரம் தெரியும். இதுவே குகை நமச்சிவாய சுவாமிகளின் ஜீவ சமாதி ஆலயம் ஆகும். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் கும்ப லக்கனத்தில் குருபூஜை நடந்து வருகிறது. ஐநூறு ஆண்டுகளை கடந்து குகை நமசிவாயருக்கு குருபூஜை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினத்தில் குகை நமச்சிவாயர் தன் கைப்பட எழுதிய சில ஓலைச்சுவடிகளை குருபூஜையின் போது வைத்து வணங்குகிறார்கள்.  [பிரபல நாளிதழில் உதவியால் தொகுக்கப்பட்டது ]

You may also like...