நாலடியார் (13) தீவினை அச்சம்

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-13

naladiyar seiyul vilakkam

அறத்துப்பால் – இல்லறவியல்

13. தீவினை அச்சம்

செய்யுள் – 01

“துக்கத்துள் தூங்கி துறவின்கட் சேர்கலா
மக்கள் பிணத்த சுடுகாடு – தொக்க
விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன் கெட்ட
புல்லறி வாளர் வயிறு”
விளக்கம்
சுடுகாடுகள், துயரம் தரும் இல்வாழ்க்கையில் கிடந்து உழன்று அவற்றை ஒழிக்கும் துறவற நெறியை அடையாத மக்களின் பிணத்தை உடையன. அற்ப அளிவுடையவர்களின் வயிறுகளோ, விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் சுடுகாடுகளாக இருக்கின்றன.

செய்யுள் – 02

“இரும்பு ஆர்க்கும் காலர் ஆய் ஏதிலார்க்கு ஆள் ஆய்
கரும்பு ஆர் கழனியுள் சேர்வர் – சுரும்பு ஆர்க்கும்
காட்டுள் ஆய் வாழும் சிவலும் குரும்பூழும்
கூட்டுள் ஆய்க் கொண்டு வைப்பார்”
விளக்கம்
வண்டுகள் ஒலிக்கும் காட்டில் வாழும் கவுதாரியையும் காடையையும் பிடித்து கூட்டில் அடைத்து வைப்பவர்கள், மறுபிறவியில் பகைவர்களிடம் அடிமைகளாகி காலில் விலங்கு பூட்டப்பட்டு வலிய பார் நிலங்களிலோ கழனிகளிலோ வேலை வாங்கப் படுவார்கள்.

செய்யுள் – 03

“அக்கேபோல் அங்கை ஒழிய விரல் அழுகி
துக்கத் தொழுநோய் எழுபவே – அக் கால்
அலவனைக் காதலித்து கால் முரித்துத் தின்ற
பழவினை வந்து அடைந்தக்கால்”
விளக்கம்
அந்த காலத்தில் நண்டைப் பிடித்து காலை ஒடித்து விரும்பித் தின்ற தீவினை வந்தடைந்த போது, சங்கு மணியைப் போல உள்ளங்கை மட்டும் வெண்ணிறமாக விளங்க விரல்களெல்லாம் அழுகி குறைந்து துன்பம் தரும் தொழுநோயால் வருந்துவர்.

செய்யுள் – 04

நெருப்பு அழல் சேர்ந்தக்கால் நெய் போல்வதூஉம்
எரிப்பச் சுட்டு எவ்வ நோய் ஆக்கும் – பரப்பக்
கொடு வினையர் ஆகுவர் கோடாரும் கோடி
கடு வினையர் ஆகியார் சார்ந்து”
விளக்கம்
உடம்புக்கு நன்மை செய்யும் நெய்யும் நெருப்பிலிட்டு காய்ச்சப்பட்டால், உடம்பில்பட்டு சுட்டு துன்பம் தரும். அது போல, நெறி தவராத நல்லோர் தீவினையாளரைச் சார்ந்தால், நெறி கெட்டு கொடுந்தொழில் செய்பவர் ஆவர்.

செய்யுள் – 05

“பெரியவர் கேண்மை பிறை போல நாளும்
வரிசை வரிசையாய் நந்தும் – வரிசையால்
வான் ஊர் மதியம் போல் வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்பு”
விளக்கம்
பெரியோர் நட்பு, பிறைச் சந்திரனைப் போல நாள்தோறும் படிப்படியாக வளரும். கீழோர் உறவு வானத்தில் தவளும் முழுமதிபோல் நாள்தோறும் சிறிது சிறிதாக தானே தேய்ந்து குறைந்து ஒழியும்.

செய்யுள் – 06

“சான்றோர் என சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச்
சான்றாண்மை சார்ந்தார்கண் இலாயின் – சார்ந்தோய் கேள்
சாந்து அகத்து உண்டு என்று செப்பு திறந்து ஒருவன்
பாம்பு கண்டன்னது உடைத்து”
விளக்கம்
சிலரை நற்குணம் உடையவரென மதித்து நட்பு கொள்ள, அவர்களிடம் நற்குணம் இல்லையாயின் நேரும் துன்பம் கூறுகிறேன் கேட்பாயாக! சந்தனம் இருப்பதாக நினைத்து செப்பை திறந்த போது உள்ளே பாம்பை பார்த்தது போலாகும்.

செய்யுள் – 07

“யாஅர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தை
தேரும் துணைமை உடையவர் சாரல்
கன மணி நின்று இமைக்கும் நாட கேள் மக்கள்
மனம் வேறு செய்கையும் வேறு”
விளக்கம்
மலைச் சாரல்களில் ஒளிவிடும் மணிகள் நிறைந்திருக்கும் நாட்டை உடைய வேந்தனே! உலகில் ஒருவருடைய மனதில் உள்ள எண்ணத்தை அறியும் வல்லமை உடையவர்கள் யார் இருக்கிறார்கள்? ஏனெனில், மக்களின் மனம் வேறாக இருக்கிறது! சொல் வேறாக இருக்கிறது! செயல் வேறாக இருக்கிறது!

செய்யுள் – 08

“உள்ளத்தால் நள்ளாது உறுதித் தொழிலர் ஆய்
கள்ளத்தால் நட்டார் கழி கேண்மை – தெள்ளிப்
புனற் செதும்பு நின்று அலைக்கும் பூங் குன்ற நாட
மனத்துக்கண் மாசு ஆய்விடும்”
விளக்கம்
தெளிந்த தன்மையுடன் கூடிய அருவிநீர் சேற்றை அலசி ஒதுக்கும் மலைநாட்டு மன்னனே! மனப்பூர்வமாக நட்பு கொள்ளாமல், உறுதியான செயல்களைச் செய்து வஞ்சனையான உறவு கொள்பவருடைய நட்பு மனத்தில் பெருங் குற்றமுடையதாக இருக்கும். வஞ்சக மனத்தான் நட்பு நஞ்சாகும் அதற்கு அஞ்சுக என்பதாம்.

செய்யுள் – 09

“ஒக்கிய ஒள் வாள் தன் ஒன்னார் கைப் பட்டக்கால்
ஊக்கம் அழிப்பதுஉம் மெய் ஆகும் – ஆக்கம்
இருமையும் சென்று சுடுதலால் நல்ல
கருமமே கல்லார்கண் தீர்வு”
விளக்கம்
தான் பகைவர் மேல் வீசிய வாள், அப்பகைவர் கையில் அகப்பட்டால், அது மனவலிமையை கெடுப்பது உறுதி. அதுபோல தீயோருக்கு செய்த உதவி, உதவி செய்தவனின் இம்மை மறுமைப் பயன்களையும் தொடர்ந்து கெடுப்பதால், அத்தகைய தீயோரிடமிருந்து விலகி இருப்பதே நல்லது ஆகும்.

செய்யுள் – 10

மனைப் பாசம் கைவிடாய் மக்கட்கு என்று ஏங்கி
ஏனைத்து ஊழி வாழ்தியோ நெஞ்சே – ஏனைத்தும்
சிறு வரையே ஆயினும் செய்த நன்று அல்லால்
உறு பயனோ இல்லை உயிர்க்கு”
விளக்கம்
நெஞ்சமே! நீ மனைவியிடம் கொண்டுள்ள ஆசையை விடமாட்டாய்! மக்களுக்கு பொருள் முதலியன சேர்த்து வைக்க வேண்டும் என்று ஏக்கமுற்று இன்னும் எவ்வளவு காலம் வாழப் போகிறாய். சிறிதளவாயினும் செய்யும் அறச் செயல் அன்றி வேறு செயலால் கிடைக்கும் பயன் ஏதும் இல்லை!

– கோமகன்

You may also like...