நாலடியார் (14) கல்வி

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-14

naladiyar seiyul vilakkam

அறத்துப்பால் – இல்லறவியல்

14. கல்வி

செய்யுள் – 01

“குஞ்சி அழகும் கொடுந் தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகும் அல்ல – நெஞ்சத்து
நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு”
விளக்கம்
தலை மயிரை சீர்படுத்தி முடிப்பதால் வரும் அழகும், முந்தானை கரையிட்ட அழகும், மஞ்சள் பூசுவதால் உண்டாகும் அழகும் உண்மையான அழகல்ல மனதளவில் உண்மையாக நடந்து கொளகிறோம் என்னும் நடுவு நிலையாம் ஒழுக்க வாழ்க்கையைதரும் கல்வி அழகே மிக உயர்ந்த அழகாம்.

செய்யுள் – 02

“இம்மை பயக்குமால் ஈயக் குறைவு இன்றால்
தம்மை விளக்குமால் தாம் உளராக் கேடு இன்றால்
எம்மை உலகத்து யாம் காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து”
விளக்கம்
கல்வி இவ்வுலக இன்பத்தை தரும். பிறருக்கு தருவதால் குறையாது புகழை எங்கும் பரவச் செய்யும் உயிரோடு இருக்கும் வரை அழியாது ஆதலால் எந்த உலகத்திலும் கல்வியை போல அறியாமையை போக்கும் மருந்து யாம் கண்டதில்லை.

செய்யுள் – 03

“களர் நிலத்து பிறந்த உப்பினை சான்றோர்
விளை நிலத்து நெல்லின் விழுமியதாக கொள்வர்
கடை நிலத்தோர் ஆயினும் கற்று அறிந்தோரைத்
தலை நிலத்து வைக்கப்படும்”
விளக்கம்
களர் நிலத்தில் உப்பை சான்றோர் நல்ல நஞ்சை நிலத்தில் விளைந்த நெல்லைவிட மேன்மையாக கருதுவர். அதுபோல கீழ்க்குடியிற் பிறந்தவர்கள் ஆனாலும் கற்றறிந்தவராயின் அவர்களை மேலான குடியினும் உயர்ந்த இடத்தில் வைத்து மதித்தல் வேண்டும்.

செய்யுள் – 04

“வைப்புழிக் கோட்படா வாய்த்து ஈயின் கேடு இல்லை
மிக்க சிறப்பின் அரசர் செறின் வவ்வார்
எச்சம் என ஒருவன் மக்கட்கு செய்வன
விச்சை மற்ற அல்ல பிற”
விளக்கம்
வைத்த இடத்திலிருந்து பிறரால் கவர்ந்து கொள்ள முடியாது நமக்கு கிடைத்து பிறருக்கு கொடுத்தால் அழிவதில்லை. மேலான படை வலிமையுடைய மன்னர் சினந்தாலும் கவர்ந்து கொள்ள முடியாது. ஆதலால் ஒருவன் தன் மக்கட்கு ‘செல்வம்’ எனச் சேர்த்து வைக்க தக்கது கல்வியே; பிற அல்ல!

செய்யுள் – 05

“கல்வி கரை இல் கற்பவர் நாள் சில
மெல்ல நினைக்கின் பிணி பல – தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீர் ஒழியப்
பால் உண் குருகின் தெரிந்து”
விளக்கம்
கல்விகள் முடிவில்லாதன; ஆனால் கற்பவருடைய வாழ்நாட்கள் சில! சற்று பொறுமையாக நினைத்து பார்த்தால் அந்த சில நாட்களிலும் பிணிகள் பலவாக இருக்கின்றன. ஆதலால் நீரை நீக்கி பாலைப் பருகும் அன்னப் பறவைப் போல அறிவுடையார் நூலின் தன்மை அறிந்து நல்ல நூல்களையே கற்பர்.

செய்யுள் – 06

“தோணி இயக்குவான் தொல்லை வருணத்து
காணின் கடைப்பட்டாள் என்று இகழார் – காணாய்
அவன் துணையா? அது போயற்றே நூல் கற்ற
மகன் துணையா நல்ல கொளல்”
விளக்கம்
படகு செலுத்துபவனை பழமையான சாதிகளில் கீழ்சாதியைச் சார்ந்தவன் என இகலமாட்டார்கள் மேலோர். அப்படகு ஓட்டுபவனின் துணை கொண்டு ஆற்றைக் கடப்பது போலாகும், நல்ல சாத்திரங்களை கற்ற கீழ்மகனின் துணை கொண்டு நூல் பொருள்களை கற்றல்.

செய்யுள் – 07

“நவல் அருந் தொல் கேள்வி தன்மை உடையார்
இகல் இலர் எஃகு உடையார் தம்முள் தழீஇ
நகலின் இனிது ஆயின் காண்பாம் அசல் வானத்து
உம்பர் உறைவார் பதி”
விளக்கம்
குற்றமற்ற பழமையான நூற்கேள்வி உடையவராய், பகைமை இல்லாதவராய், கூர்மையான அறிவுள்ளவராய் விளங்கும் கற்றோர் குழுவில் சேர்ந்து அளவளாவி மகிழ்வதைவிட இன்பம் உடையதாயின், அகன்ற வானத்தின் மேல் தேவர்கள் வாழும் திருநகரை காண முயல்வோம். மற்றோருடன் சேர்ந்து பெறும் இன்பத்தை விட துறக்க இன்பம் சிறந்ததன்று.

செய்யுள் – 08

“கனை கடல் தண் சேர்ப்ப கற்று அறிந்தார் கேண்மை
நுனியின் கரும்பு தின்றற்றே – நுனி நீக்கி
தூரின் நின்றன்ன தகைத்துஅரோ பண்பு இலர்
ஈரம் இலாளர் தொடர்பு”
விளக்கம்
ஒலிக்கும் கடலினது குளிர்ச்சி பொருந்திய துறையையுடைய வேந்தனே! கற்றறிந்தவரின் நட்பு, நுனியிலிருந்து கரும்பை தின்பது போலாம். அதன் அடிப்பகுதியிலிருந்து தின்பது போலாம் நற்பண்பும் அன்பும் இல்லாதார் நட்பு.

செய்யுள் – 09

“கல்லாரே ஆயினும் கற்றாரை சேர்ந்து ஒழுகின்
அறிவு நாளும் தலைப்படுவர் தொல் சிறப்பின்
ஒள் நிறப் பாதிரிப்பூ சேர்ந்தலால் புத்தோடு
தண்ணீர்க்கு தான் பயந்தாங்கு”
விளக்கம்
பழமையான சிறப்பினையுடைய அழகிய பாதிரி பூவை சேர்ந்திருப்பதால் புதிய மண்பானையானது தன்னிடத்தில் உள்ள தண்ணீருக்கு தான் நறுமணத்தைக் கொடுத்து, அத்தண்ணீரை நறுமணம் உள்ளதாக்கும். அதுபோல, நடந்தால் நல்லறிவு நாளும் உண்டாகப் பெறுவர்.

செய்யுள் – 10

“அலகு சால் கற்பின் அறிவன் நூல் கல்லாது
உலக நூல் ஓதுவது எல்லாம் – கலகல
கூஉம் துணைஅல்லால் கொண்டு தடுமாற்றம்
போஒம் துணை அறிவார் இல்”
விளக்கம்
எல்லையற்ற கல்விகளுக்குள்ளே மெய்ஞான நூல்களை கற்காமல் விட்டுவிட்டு, வெறும் உலக அறிவை மட்டும் தரும் நூல்களை கற்ப்பதெல்லாம் ‘கலகல’ என்னும் வீணான சலசலப்பேயாகும். இத்தகைய இவ்வுலக அறிய நூல்களை கொண்டு பிறவியாகிய தடுமாற்றத்தை, துன்பத்தை போக்கும் வழியை அறிபவர் எங்கும் இல்லை.

– கோமகன்

You may also like...