நாலடியார் செய்யுள் விளக்கம் (4 – அறன் வலியுறுத்தல்)

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் naladiyar seiyul vilakkam-4

naladiyar seiyul vilakkam

அறத்துப்பால் – துறவற இயல்

04. அறன் வலியுறுத்தல்

செய்யுள் – 01

“அகத்து ஆரே வாழ்வார் என்று அண்ணாந்து நோக்கி
புகத் தாம் பெறாஅர் புறங்கடை பற்றி
மிகத் தாம் வருந்தியிருப்பரே மேலைத்
தவத்தால் தவம் செய்யாதார்”

விளக்கம்
இவ்வீட்னில் உள்ளவர்கள் சிறப்பாக வாழ்வார்கள்” என்று வாழ்த்தி, உயர்ந்தோங்கி நிற்கும் வீட்டை அண்ணாந்து நோக்கி, உள்ளே போக முடியாமல் வாசலிலே வருந்தி நிற்பவர் என்றால் அவர் முற்பிறவியிலும் தவம் செய்யாதவர் ஆவார்.

செய்யுள் – 02

“ஆவாம் நாம் ஆக்கம் நசஈ அறம் மறந்து
போவாம் நாம் என்னா புலை நெஞ்சே – ஓவாது
நின்று உஞற்றி வாழ்தி எனினும் நின் வாழ் நாள்கள்
சென்றன செய்வது உரை”

விளக்கம்
அறத்தை மறந்து இறந்து போவோம் நாம் என எண்ணாத மட நெஞ்சே! செல்வத்தைப் பெருக்கி பெருஞ் செல்வந்தராவோம் என்றெண்ணி ஓயாமல் உழைத்து வாழ்கின்றாய். இவ்வாறு உன் வாழ்நாள் கழிந்து போனது. இனி நீ மறுமைக்கு செய்யப் போவது என்ன? நீ சொல்.

செய்யுள் – 03

வினைப் பயன் வந்தக்கால் வெய்ய உயிரா
மனத்தின் அழியுமாம் பேதை நினைத்து அதனைத்
தொல்லையது என்று உணர்வாரே தடுமாற்றத்து
எல்லை இகந்து ஒருவுவார்”

விளக்கம்
அறிவில்லாதவன்,முன் செய்த தீவினை இப்போது வந்து பயனைத் தந்து துன்புறுத்துவதால் மனம் வருந்தி நிற்பான். தீவினையின் பயனை நினைத்துப் பார்த்து இது முற்பிறவி பாவத்தால் நேர்ந்தது என உணர்ந்து அதனை அமைதியாக அனுபவிக்கும் அறிவுடையோர் பிறவி துன்பத்தின் எல்லை கடந்து நீங்குவார் – naladiyar seiyul vilakkam-4.

செய்யுள் – 04

“அரும் பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்
பெரும் பயனும் ஆற்றவே கொள்க – கரும்பு ஊர்ந்த
சாறுபோல் சாலவும் பின் உதவி மற்று அதன்
கோதுபோல் போகும் உடம்பு”

விளக்கம்
பெறுவதற்கு அரிய இம்மனித உடம்பை புண்ணிய பயனால் பெற்றிருக்கிறோம். அப்படி பெற்றதைக் கொண்டு சிறந்த புண்ணியத்தை மேலும் மிகுதியாக தேடிக் கொள்ள வேண்டும். அப்புண்ணியம், கரும்பிலிருந்து உண்டாகும் சாறு போல், உயிருக்கு பெரிதும் உதவும். அக் கரும்பின் சக்கை போல் உடம்பு பயனற்றதாய் அழிந்து போகும்!

செய்யுள் – 05

“கரும்பு ஆட்டி கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பு எழுந்து வேங்கால் துயர் ஆண்டு உழவார்
வருதல் உடம்பின் பயன் கொண்டார் கூற்றம்
வருங்கால் பரிவது இலர்”

விளக்கம்
கரும்பை ஆலையில் ஆட்டி அதன் சாற்றினால் ஆகிய வெல்லக் கட்டியை நல்ல பதத்திலே கொண்டவர்கள், அந்த கரும்பின் சக்கை தீப்பற்றி எரியும் போது துன்புற மாட்டார்கள். அதுபோல், முயன்று நல்லறம் செய்து பிறவிப் பயனை பெற்றவர் எமன் வரும் போது துன்பம் அடையார்.

செய்யுள் – 06

“இன்று கொல் அன்று கொல் என்று கொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றம் என்று எண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம்”

விளக்கம்
இறப்பு இன்று வருமோ? அன்று வருமோ? என்று வருமோ? என்று நினைக்காமல், எமன் பின்புறத்திலே நிற்கிறான் என எண்ணி தீய செயல்களை விட்டு விடுங்கள் முடிந்த அளவு மாண்புடையார் போற்றிய அறத்தை செய்யுங்கள்.

செய்யுள் – 07

“மக்களால் ஆய பெரும் பயனும் ஆயுங்கால்
எத்துணையும் ஆற்றப் பலாஅனால் – தொக்க
உடம்பிற்கே ஒப்புரவு செய்து ஒழுகாது உம்பர்க்
கிடந்து உண்ணப் பண்ணப்படும்”

விளக்கம்
மக்கட்பிறவியால் செய்யத்தக்க நற்செயல்களை பற்றி எப்படி ஆராய்ந்து பார்த்தாலும் அவை மிகப் பலவாம். அப்படியிருக்க, எலும்பும், தோலும், சதையும், இரத்தமும் கூடிய இந்த உடம்புக்கே உதவி செய்து வாழ்ந்து கொண்டிராமல், மறுமை இன்பங்களை நுகற்தற்கேற்ப நல்லறங்களை செய்ய வேண்டும்.

செய்யுள் – 08

“உறக்கம் துணையது ஓர் ஆலம் வித்து ஈண்டி
இறப்ப நிழற் பயந்தாஅங்கு – அறப்பயனும்
தான் சிறிது ஆயினும் தக்கார் கைப் பட்டாக்கால்
வான் சிறிதாப் போர்த்துவிடும்”

விளக்கம்
மிகச் சிறிய ஆல விதை, வளர்ந்து ஓங்கி தழைத்து மிக்க நிழலை தருவது போல அறப்பொருள் சிறிதாயினும், அது தகுதியுடையோர் கையில் சேர்ந்தால் அதன் பயன் வானினும் பெரிதாக விளங்கும்.

செய்யுள் – 09

“வைகலும் வைகல் வரக்கண்டும் அஃது உணரார்
வைகலும் வைகலை வைகும் என்று இன்புறுவர்
வைகலும் வைகல் தம் வாழ் நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்து உணராதார்”

விளக்கம்
நாள்தோறும் நாள் கழிந்து வருவதை பார்த்திருந்தும், அப்படி தோன்றும் நாள் கழிதலை அறியாதவர், தம் ஆயுள் நாளில் ஒரு அப்படி கழிவதை உணராது அது நிலையாக இருக்கிறது என நினைத்து இன்புறுவர்.

செய்யுள் 10

“மான் அருங் கலம் நீக்கி இரவு என்னும்
ஈன இளிவினால் வாழ்வேண்டின் ஈனத்தால்
ஊட்டியக் கண்ணும் உறுதி சேரந்து இல் உடம்பு
நீட்டித்துலநிற்கும் எனின்”

விளக்கம்
இழிவான காரியத்தைச் செய்து உணவு உண்பதால் உண்பதால், இவ்வுடம்பு நீண்டநாள் நிலைத்திருக்கும் என்பது உண்மையானால், மானம் என்னும் அணிகலனை களந்தெறிந்துவிட்டு உயிர் வாழ்வேன்!

– கோமகன்

You may also like...