எங்கே என் அத்தை? – சிறுகதை

சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்கள் எழுதிய மனதை நெருட வைக்கும் நிகழ்வுகளை உள்ளடக்கிய கதை “எங்கே என் அத்தை” வாசிப்போம் – enge en athai sirukathai.

enge en athai sirukathai

விமானம் நியூயார்க் விமான நிலையத்திலிருந்து கிளம்பிய வினாடியே என்னுள் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது. விமான பணிப்பெண் அருகில் வந்து “மேடம்! சீட் பெல்ட் போட்டுக்குறீங்களா? நான் ஹெல்ப் பண்ணவா!” என ஆங்கிலத்தில் கேட்கும்வரை சீட் பெல்ட் போடவில்லை என்பது நினைவுக்கு வரவில்லை. இந்தியா தனியாக வருவது புதிதில்லை.நானும், அவரும் அவசியத்திற்கு தனியாக வந்து செல்வோம். திட்டமிட்ட பயணம் என்றால் மட்டுமே குழந்தைகளை அழைத்து வருவோம். அப்போதெல்லாம் மனம் அலைபாய்ந்ததில்லை. இப்போது என் பிரிய அத்தையைப் பார்க்கப் போகும் சந்தோஷம் என்னுள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.

சீதா அத்தை

நினைவுகள் பின்னோக்கி ஓடியது. அப்போது நாங்கள் தஞ்சாவூரில் குடியிருந்தோம். அப்பா, அம்மா, அண்ணா, நான், பாட்டி, சீதா அத்தை, அத்தை பசங்க..பாலா, ராதா, வீட்டோடு இருந்து வேலை பாத்த மீனு என 10 உருப்படிகள். வீடு ஜேஜே வென இருக்கும். அம்மா பெரிய பானையில் தான் சாதம் வடிப்பாள்.

சீதா அத்தைக்கு என் மேல் தனி பிரியம்.அத்தையின் செல்லம் நான்தான். அப்பாவின் ஒரே தங்கை. உள்ளூர் மாப்பிள்ளையாக பார்த்தால், தங்கையை பிரிய வேண்டாம் என உள்ளூர் பையனுக்கு கட்டி கொடுத்தார்.ஆனால் எல்லாம் ரொம்ப நாள் நிலைக்காமல் போனது. இரண்டு பிள்ளைகள் பிறந்த, கொஞ்ச நாளிலேயே, ஒரு சாலை விபத்தில் மாமா போய் சேர்ந்தார்.காரியம் முடிந்த கையோடு, தங்கையையும், பிள்ளைகளையும் தன் வீட்டிற்கு கூட்டி வந்து விட்டார் அப்பா. என் நினைவு தெரிந்த நாளிலிருந்து, சீதா அத்தை எங்களுடன் தான் இருக்கிறாள்.

அத்தையைப் போல ஒரு மனுஷியை பார்க்க முடியாது. எவ்வளவு சோகம் உள்ளுக்குள் இருந்தாலும் துளிகூட காண்பிக்க மாட்டாள். காலை எழுந்ததும், எங்கள் எல்லோரையும் காலைக்கடன்களை ஒழுங்காக செய்ய வைப்பாள். குளித்து முடித்ததும்., விபூதி பூசி., தேவார, திருவாசக பாடல்களை பாடச் சொல்லிக் கொடுப்பாள். மற்ற எல்லா பிள்ளைகளும் பள்ளி கிளம்பி, விட நான் மட்டும் முரண்டு பண்ணுவேணாம். அத்தை, என்னை மட்டும் மடியில் இருத்தி, கதை சொல்லி சாப்பாடு ஊட்டி பிறகு ,தானே பள்ளியில் கொண்டுவிடுவாள்.இரவு நேரத்தில், கற்சட்டியில் சோறு பிசைந்து, கவளமாக. கையில் உருட்டி போடுவாள். நாயன்மார்கள், ஆழ்வார்கள் என தினமும் ஒருவர் கதையை சுவாரஸ்யமாக சொல்லுவாள் – enge en athai sirukathai.

பாசம், கருணை, நேர்மை

வேலை பார்க்கும் மீனுவைக் கூட, வீட்டுக் குழந்தையாகத்தான் பார்ப்பாள்.” ஏட்டி மீனு! கிட்ட வா.. வந்து ரெண்டு கவளம் வாங்கிக்கோ!” என்பாள். என் பாட்டிக்கு இது பிடிக்காது. முணுமுணுவெண்பாள். மீனுவுக்கு லேசாக உடம்பு சரியில்லையென்றால், உடனே டாக்டரிடம் அழைத்துப் போவாள். “தொடப்பக்கட்டைக்கு பட்டுக்குஞ்சம் “எனபாள் பாட்டி.” அம்மா அப்படி பேசாதே!அவ சின்ன பொண்ணு.நம்ம புள்ள வேற அவ வேற இல்ல. குத்திப்பாரு உன்னோட உடம்புலேயும் சிவப்பு ரத்தம் தான் ஓடுது,அவ உடம்புலயும் சிவப்பு இரத்தம் தான் ஓடுது!” என்பாள்.

நான் வளர வளர அத்தையின் நல்ல பண்புகள் என்னுள் பதிய ஆரம்பித்தது. இன்று வரை எங்கள் வீட்டு கார் டிரைவரை ‘அண்ணா’ என்றுதான் அழைக்கிறேன். வேலை பார்ப்பவர்களையும் கூடப்பிறந்தவர்களாகத்தான் பாவிக்கிறேன்.அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு தவறாமல் போவேன். இதெல்லாம் அத்தை வளர்ப்பில் வந்த பண்பு என்று எண்ணிக்கொள்வேன். ஒரு செடி வாடியிருந்தால் கூட பொறுக்காது,உடனே ஒரு வாளி தண்ணீரைத் தூக்கிக் கொண்டு ஓடுவாள். பாசம், கருணை, நேர்மை என நற்பண்புகளின் மொத்த உருவம் என் அத்தை, அப்படிப்பட்ட பாச தேவதையைத்தான் பார்க்கப் போகிறேன்.

அத்தை பசங்க கல்யாணத்திற்கு வந்தபோது வேலையில்.. நல்லா பேச முடியவில்லை. போன தடவை நான் தஞ்சாவூர் வந்தப்ப பாலா அத்தான் சிங்கப்பூரில் டாக்டராக இருக்கிறான் என்றும், அத்தை, மகன் கூட இருப்பதாக அப்பா சொன்னார். பாலா அத்தான் சென்னையில் மருத்துவமனை கட்ட… அத்தை தஞ்சாவூரை மறந்து, சென்னையிலேயே செட்டிலானாள். 10 நாட்களாவது அவள் கூட இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு தான், சென்னைக்கு பிளைட் டிக்கெட் போட்டிருந்தேன்.

ஏர்போர்ட்டுக்கு அத்தான் வந்திருந்தான். செக்கிங் முடித்து வெளியே வர ஒரு மணி நேரம் ஆயிற்று. வீடு வரும் வரை குழந்தைப் பருவத்து நிகழ்வுகளையே பேசிக் கொண்டு வந்தோம். என்னைப்போல அத்தானும் எல்லா விஷயங்களையும் நினைவில் வைத்திருந்தது ஆச்சரியமாக இருந்தது.

வீடு வந்ததும் வாசலிலேயே, என் கண்கள் அத்தையை தேடியது.
“அபி அம்மாவ தேடுறியா? இப்ப வந்துடுவா! ஆஸ்பிட்டல் மேனேஜ்மென்ட். எல்லாம் அம்மாதான் பார்த்துகறா..”

“என்னது.. அத்தை ஆஸ்பிட்டல் மேனேஜ்மென்ட் பார்க்கறாளா? “

“எல்லாம் உன் செல்ல அத்தையை நீயே கேட்டுக்கோ! நான் இப்பக் கிளம்பறேன்.பேஷண்ட்ஸ் வெயிட் பண்ணிகிட்டு இருப்பாங்க.. செல்வி.. அம்மாவுக்கு வேணுங்கறதை செஞ்சு கொடு!” என்று வேலை பார்க்கும் பெண்ணிடம் சொல்லிவிட்டு கிளம்பி போனான் அத்தான்.

மனதின் ஓரத்தில் ஒரு சிறு ஏமாற்றம் எட்டிப்பார்த்தது. பல வருடங்கள் கழித்து வரும் என்னை வரவேற்க, அத்தை ஆசையோடு வாசலில் நிற்பாள்.. கட்டி அணைத்துக் கொள்வாள்.. என்று எதிர்பார்த்தது தவறோ? என்று தோன்றியது.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அத்தையின் கார் உள்ளே நுழைய, நான் வாசலுக்கு ஓடினேன். காரிலிருந்து இறங்கிய அத்தையைப் பார்த்ததும் ஒரு கணம் திகைப்பாக இருந்தது. மடிப்பு கலையாத காட்டன் சேலையை நீட்டாக கட்டி, பின் பண்ணி, மேட்ச்சாக டிசைன் பிளவுஸ் போட்டிருந்தாள். ஒரு கணம் தஞ்சாவூர் சுங்கடி சேலை கட்டிய அத்தை கண் முன் வந்தாள். அடுக்களை கழுவிவிட்டு படுக்கும்போது லேசாக நனைந்த அந்த ஈரச் சேலையின் குளிர்ச்சிக்காக, அவள் மேல் காலைப் போட்டுக்கொண்டு தூங்கியது நினைவுக்கு வந்தது.பாலா அத்தான் குழந்தைகளுக்கு அந்த பாக்கியம் கிடைக்காது, என்று நினைத்தபோது சிரிப்பு வந்தது.

அத்தை நிறையவே மாறிவிட்டாள்

“வாடி அபி!” என்ற அத்தை, நாகரீகமா என்னை ஹக் பண்ணி கொண்டாள். உள்ளே வந்தவள் சோபாவில் அமர்ந்து.”செல்வி”என்று குரல் கொடுக்க… செல்வி இரு கண்ணாடித் தம்ளர்களில் ஜூஸ் எடுத்து வந்தாள்.

“ஏண்டி அறிவிருக்கா? இப்படி ததும்ப கொண்டு வராதேன்னு எத்தனை தடவை சொல்றது.சாரில சிந்திட்டா? காஸ்ட்லி சாரி வீணாகிடாது!” என்றவள், அப்ப்பா இவர்களிடம் மட்டை யடிக்க வேண்டியிருக்கு!” என்று அலுத்துக் கொண்டாள்.

டிரைவர் சாவியை கொண்டு வந்து கொடுக்க ,” சுந்தரம்! தினமும் லேட்டா வந்தா சரிப்படாது. நான் சீக்கிரம் வேற ஆள் தான் தேடணும்.”

“இல்லம்மா! குழந்தைக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கு! ” – enge en athai sirukathai

“காரணம் எல்லாம் எனக்கு வேண்டாம். டிசிப்ளின்தான் முக்கியம்!”என்றாள். கடுமையாக.

“அப்புறம் அபி, நீ , உன் பிள்ளைங்க, உன் வீட்டுக்காரர் எல்லாம் நல்லா இருக்காங்களா?உனக்காகத்தான் இன்னைக்கு சீக்கிரமே வந்துட்டேன். நாளைக்கு என்கூட ஹாஸ்பிடலுக்கு வா. உனக்கு சுத்திக் காண்பிக்கிறேன். ஹாஸ்பிடல் நிர்வாகத்தை நான்தான் பார்த்துக்கிறேன்.”

கிராமத்தில் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த அத்தை, பேசுவதை கேட்க ஆச்சரியமாக இருந்தது. அதேநேரம் வேலையாட்களிடம் அவள் காட்டிய கடுமை எனக்கு மிகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. அத்தை நிறையவே மாறிவிட்டாள்.

பணம் செலவு பண்ண முடியாது

மறுநாள் சொன்னபடி ஹாஸ்பிட்டல் கூட்டிக்கொண்டு போனாள். அத்தை இயல்பாகவே நிர்வாகத்தில் கெட்டிக்காரி. ஒரு படித்த பெண்ணை பிஏ வாக வைத்துக் கொண்டு, பல்வேறு வேலைகளை மேற்பார்வை பண்ணுவது, பிரமிப்பாக இருந்தது. மிகவும் பெருமையாகவும் இருந்தது. என்னை தன் அறையில் உட்கார வைத்து விட்டு வெளியே போனாள்.

நான் எதேச்சையாக வெளியே வர, அத்தை அடுத்த அறையில் யாருடனோ பேசுவது லேசாக கேட்டது.

“மேடம்! அந்த பேஷண்ட் வசதியில்லாதவன். அவனால் இந்த டெஸ்ட்க் கெல்லாம் பணம் செலவு பண்ண முடியாது. அது அவனுக்கு எடுக்க தேவையுமில்லை.”

“டாக்டர் இவ்வளவு சம்பளம் கொடுத்து உங்களை வேலைக்கு எடுத்தது, எங்களுக்கு வருமானத்தை சம்பாதித்து கொடுக்கத்தான். ஏழைகளுக்கு சேவை பண்ண இல்லை. அவங்களுக்கு செலவு பண்ண வசதி இல்லைன்னா அரசாங்க ஆஸ்பத்திரி போகவேண்டியது தானே? நாம தடுக்கலையே!”

கோபமாய் வெளியே வந்தவள்… என்னை பார்த்து திகைத்தாள்.. “அபி! இப்ப உள்ள உலகத்துல இப்படி எல்லாம் இல்லைன்னா ஆஸ்பத்திரி நடத்த முடியாது. கொஞ்சம் கறாராக இருந்தால்தான் லாபத்தைப் பார்க்க முடியும்!” என்றாள் அந்த ஆஸ்பத்திரியின் நிர்வாக அதிகாரி சீதா.என் இளமனதில் புத்தரின், காந்தியின், தர்மத்தை போதித்தவள். மனம் கசந்தது.

“சரி வா.. வீட்டுக்குப் போகலாம்!” என்றாள் அத்தை.
“அத்தை! நான் நாளைக்கு தஞ்சாவூர் போகலாம்னு இருக்கேன். அப்பாஅம்மாவை பாக்கணும் போல இருக்கு!” என்றேன்.”சரி உன் பிறந்த வீட்டு ஞாபகம் உனக்கு வந்துருச்சு! போயிட்டு வா..” என்றாள் பட்டும் படாமல்.

மனதில் இனம் புரியாத சோகமும்., ஏமாற்றமும் பிடித்தாட்ட, மறுநாள் தஞ்சை கிளம்பினேன், அங்கு நினைவுகளிளாவது என் பிரிய அத்தையை மீட்டெடுக்கலாம்.. என்ற ஆசையுடன்.

– தி.வள்ளி, திருநெல்வேலி

You may also like...

4 Responses

  1. என்.கோமதி says:

    காலத்தின் மாற்றம் சீதா அத்தையையும் மாற்றி விட்டது.
    அம்மா, அப்பா எப்படியோ? எனக் கேட்க வைத்தது,படித்து முடித்தவுடன்.அபி…அங்கு என்ன நடந்தது? அடுத்த கதையில் சொல்வாயா?

  2. நிர்மலா says:

    முதல் பகுதியில் அத்தையடனும், அபியுடனும் பயணித்தாற் போல் இருந்தது.
    அபியுடன் சேர்ந்து ஏமாற்றத்தை அனுபவிக்க, அருமையான நடை. வாழ்த்துகள்.

  3. Priyaprabhu says:

    நல்ல கதை.. அருமையாக இருந்தது 👌👌

  4. அர்ஜுன் பாரதி says:

    மிக அருமையான சிறுகதை…அனைத்து உறவுகளும் மாறிப்போகும் இவ்வுலகிற்கு ஏற்ற ஓர் அழகான கதை……

    மிக்க நன்றி ஆசிரியர் அவர்களுக்கு