அல்சருக்கு எளிய வீட்டு வைத்தியம்
பத்து வருடங்களுக்கு முன்பு திடீரென்று சொல்ல முடியாத வயிற்றுவலி வந்தவுடன் மருத்துவரிடம் சென்று காண்பித்துப் பரிசோதனை செய்ததில் வயிற்றில் அல்சர் என்று சொல்லி பல வண்ணங்களில் மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். நானும் வாங்கிச் சாப்பிட்டேன். ஆனால் வயிற்றுவலி குறைவதாக இல்லை. என்ன செய்வது என்றே தெரியாமல் திண்டாடினேன். சரியான நேரத்திற்கு (உணவு) சாப்பிடாவிட்டால் கூட வயிற்றுவலி வந்து பாடாய்ப் படுத்தி விடும் – manathakkali keerai for ulcer, paatti vaithiyam.
![manathakkali keerai for ulcer](http://www.neerodai.com/wp-content/uploads/2020/02/manathakkali-keerai-for-ulcer.jpg)
அப்போது என்னுடைய பெரிய அத்தையின் பெண் எங்கள் வீட்டிற்கு வந்தார். என்னுடைய உடல் உபாதையைப் பார்த்து விட்டு, “ஏன் மருத்துவரிடம் போய்ப் பணத்தை வீணாக்கினாய்? வாசலில் வரும் கீரைக்காரியிடம் ஒரு கட்டு மணத்தக்காளிக் கீரையை வாங்கி ஆய்ந்து வைத்துக் கொள்; ஒரு கைப்பிடிக் கீரையை அலம்பி ஒரு பாத்திரத்தில் போட்டு ஒன்றே கால் டம்ளர் தண்ணீர் விட்டு 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி, வடி கட்டி, அதனுடன் பால், சர்க்கரை சேர்த்துக் கலந்து காலையில் தேநீருக்குப் பதில் ஒரு மாதம் குடித்து வா! அப்புறம் சொல்லு!” என்று சொன்னார்.
எனக்கு அவ்வப்போது புதிதாகக் கீரை வாங்கும் வாய்ப்பு இல்லாததால் மொத்தமாக வாங்கிக் கீரையை ஆய்ந்து அலம்பி, நன்றாக நிழலில் காய வைத்து உலர்த்திப் பவுடர் செய்து வைத்துக் கொள்வேன். தினமும் காலையில் தேநீர் போடுவது போலவே இந்தக் கீரைப் பொடியை ஒரு ஸ்பூன் போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, பால், சர்க்கரை சேர்த்துக் கலந்து குடிக்க ஆரம்பித்தேன். ஒரு வாரத்திற்குள் சுத்தமாக வலி இல்லவே இல்லை. ஒரு மாதம் குடித்து விட்டு அப்புறம் நிறுத்தி விட்டேன். அதன் பிறகு கடந்த 10 வருடங்களாக அந்தப் பிரச்னை இல்லவே இல்லை – manathakkali keerai for ulcer, பாட்டி வைத்தியம். .
அதன் பிறகு எனக்குத் தெரிந்தவர்கள் யாராவது இந்த மாதிரிப் பிரச்னையில் திண்டாடினால், முதலில் என்னிடம் இருக்கும் மணத்தக்காளிக் கீரைப் பொடியில் கொஞ்சம் கொடுத்து, செய்யும் முறையையும் சொல்லி விடுவேன். அவர்களும் நல்ல பலன் அடைந்துள்ளார்கள்.
– ஆர். பிருந்தா இரமணி, மதுரை