நாலடியார் செய்யுள் விளக்கம் (8 – பொறையுடமை)

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-8

naladiyar seiyul vilakkam

அறத்துப்பால் – இல்லறவியல்

08. பொறையுடமை

செய்யுள் – 01

“கோதை அருவிக் குளிர் வரை நாட
பேதையோடு யாதும் உரையற்க – பேதை
உரைக்கின் சிதைந்து உரைக்கும் ஒல்லும் வகையால்
வழுக்கிக் கழிதலே நன்று”

விளக்கம்
மாலை போன்ற அருவிகளாலே குளிர்ந்த மலைகளையுடைய மன்னனே! அறிவில்லா மனிதர்களிடம் எதையும் சொல்ல வேண்டாம்! அவனிடம் ஒன்றைச் சொன்னால் அவன் மாறுபட்டுப் பதில் உரைப்பான். ஆதலின் கூடுமானவரை அப்பேதையிடமிருந்து தப்பித்து நீங்குதல் நல்லது.

செய்யுள் – 02

“நேர் அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால் மற்று அது
தாரித்திருத்தல் தகுதி மற்று – ஓரும்
புகழ்மையாக் கொள்ளாது பொங்கு நீர் ஞாலம்
சமழ்மையாக் கொண்டு விடும்”.

விளக்கம்
நற்குணம் இல்லாதவர் பண்பற்ற சொற்களை சொல்லும் போது, அதை பொறுத்துக் கொண்டிருப்பதே தகுதியானதாகும். அவற்றைப் பொறுக்காமல் பதில் கூறினால், கடல் சூழ்ந்த உலகம் அதனை புகழுக்குரிய செயலாக கொள்ளாது. பழிக்குரிய செயலாக கருதும்.

செய்யுள் – 03

“காதலார் சொல்லும் கடுஞ் சொல் உவந்து உரைக்கும்
ஏதிலார் இன் சொலின் தீது ஆமோ – பொது எலாம்
மாதர் வண்டு ஆர்க்கும் மலி கடல் தண் சேர்ப்ப
ஆவது அறிவார்ப் பெறின்”

விளக்கம்
மலர்களில் எல்லாம் வண்டுகள் மொய்க்கும் குளிர்ச்சி பொருந்திய கடற்கரையை உடைய வேந்தனே! நம் மீது அன்பு மிகக் கொண்ட அறிஞர் சொல்லும் கடுஞ் சொல்லானது, உள்ளத்தில் பகை உணர்வுடன் முகம் மலர்ந்து பேசுவரின் இன்சொல்லை விட தீது தருவல்ல என அறிவாயாக.

செய்யுள் – 04

“அறிவது அறிந்து அடங்கி அஞ்சுவது அஞ்சி
உறுவது உலகு உவப்பச் செய்து – பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்புடையார் எஞ் ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது”

விளக்கம்
அறிய வேண்டிய நன்மை தீமைகளை அறிந்து அடக்கமுடையவராகி, அஞ்ச வேண்டிய வற்றிற்கு அஞ்சி, செய்வதைஉலகம் மகிழுமாறு செய்து, வந்த பொருளால் மகிழ்ந்து வாழும் இயல்புடையவர் எக்காலத்தும் துனுபுற்று வாழ்தல் இல்லை.

செய்யுள் – 05

“வேற்றுமை இன்றிக் கலந்து இருவர் நட்டக்கால்
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்
ஆற்றும் துணையும் பொறுக்க பொறானாயின்
தூற்றாதே தூர விடல்”

விளக்கம்
மன வேற்றுமை சிறிதுமின்றி இருவர் நண்பரான பிறகு, தகாத ஒழுக்கம் ஒருவரிடம் உண்டானால் அதனை மற்றவர் பொறுக்கக் கூடிய அளவு பொறுத்துக் கொள்க! பொறுக்க முடியாமல் போனால், பிறர் அறிய அவரது குற்றத்தை வெளிப்படுத்தி பழிக்காமல் நட்பை விட்டு விலகி விடுக.

செய்யுள் – 06

“இன்னா செயினும் இனிய ஒழிக என்று
தன்னையே தான் நோவின் அல்லது – துன்னிக்
கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட
விலங்கிற்கும் விள்ளல் அரிது”

விளக்கம்
காடுகள் நிறைந்த நாட்டையுடைய மன்னனே! நண்பர்கள் நமக்கு தீமைகள் செய்தாலும் அவை நன்மையாக கடவது என்று நினைத்து, வினைப் பயன் என எண்ணித் தன்னையே தான் வெறுப்பதல்லாமல், நெருங்கி மனம் ஒன்றிப் பழகியவரை விட்டு விடாதே! சேர்ந்த பின் பிரிதல் விலங்கினிடத்தும் இல்லை!.

செய்யுள் – 07

“பெரியார் பெரு நட்புக் கோடல் தாம் செய்த
அரிய பொறுப்ப என்று அன்றோ – அரியரோ நாட
ஒல்லென அருவி உயர் வரை
நல்ல செய்வார்க்கு தமர்”

விளக்கம்
‘ஒல்’ என ஒலிக்கும் அருவிகளை கொண்ட உயர்ந்த மலைகளை உடைய நல்ல நாட்டின் வேந்தனே! பெரியோர்களின் மேன்மையான நட்பைக் கொள்ளுதல், தாங்கள் செய்த அரிய குற்றங்களையும்
அவர்கள் பொறுத்துக் கொள்வார்கள் என்பதால் அல்லவா? எப்போதும் நல்ல செயல்களை செய்பவற்கு நல்ல நண்பர்கள் கிடைக்க மாட்டார்களா? கிடைப்பார்கள்.

செய்யுள் – 08

“வற்றி மற்று ஆற்றப் பசிப்பினும் பண்பு இலார்க்கு
அற்றம் அறிய உரையற்க – அற்றம்
மறைக்கும் துணையார்க்கு உரைப்பவே தம்மைக்
துறக்கும் துணிவு இலாதார்”

விளக்கம்
உடல் வற்றி துரும்பு ஒத்த நிலை எய்துமாறு பசி வந்தாலும், உதவி செய்யும் பண்பு இல்லாதவரிடம் சென்று வறுமையை சொல்லாதீர்! உயிரை விடும் துணிவில்லாதவர் உதவி செய்யும் பண்புடையவரிடம் மட்டும் தமது வறுமையை உரைப்பார்.

செய்யுள் – 09

“இன்பம் பயந்தாங்கு இழிவு தலைவரினும்
இன்பத்தின் பக்கம் இருந்தைக்க – இன்பம்
ஒழியாமைக் கண்டானும் ஓங்கு அருவி நாட
பழி ஆகா ஆறே தலை”

விளக்கம்
இன்பம் தந்த செயலிலே தாழ்வு நேர்ந்தாலும் இன்பத்தையே கருதி, அவ்வின்பத்திலேயே நிலைத்திருக்கும் உனக்கு இன்பம் இடையறாது பெருகுவதைக் கண்டாலும் நீ பழி உண்டாக்காத செயலை செய்வதுதான் சிறந்ததாகும்.

செய்யுள் – 10

“தான் கெடினும் தக்கார் கேடு எண்ணற்க தன் உடம்பின்
ஊண் கெடினும் உண்ணார் கைத்து உண்ணற்க – வான் கவிந்த
வையகம் எல்லாம் பெறினும் உரையற்க
பொய்யொடு இடை மிடைந்த சொல்” – naladiyar seiyul vilakkam-8

விளக்கம்
தான் கெட்டாலும் தக்கார்க்கு கேடு செய்ய எண்ணாது இருக்க வேண்டும். தன் உடலிலுள்ள சதை முழுவதும் பசியால் உலர்வதானாலும் உண்ணத் தகாதவரிடத்து உணவை உண்ணாதிருப்பாயாக! வானம் மூடிய இந்த உலகம் எல்லாம் பெறுவதாயினும் பொய் கலந்த சொற்களை சொல்லாதிருப்பாயாக!

– கோமகன்

You may also like...

2 Responses

  1. தி.வள்ளி says:

    அருமை..பாடலும்..விளக்கமும்..

  2. சரவணகுமார் says:

    நாலடியார் செய்யுள் விளக்கம் அருமை அருமை. நம் வாழ்க்கையில் ஒவ்வொரு காலடி அடி எடுத்து வைக்கும் போது இந்த நாலடி நமக்கு என்றும் துணை நிற்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.