நூல் விமர்சனம் – கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்

தனது முதல் சிறுகதை வாயிலாக வாசகர்களை ஈர்த்த ப்ரியா பிரபு அவர்கள் எழுதிய நூல் விமர்சனம் “கனவுகள் +கற்பனைகள் =காகிதங்கள்” – kanavugal karpanaigal kakithangal puthaga vimarsanam

kanavugal karpanaigal kakithangal

எண்ணங்களில் வண்ணங்கள் சேர்க்கும் இளமையின் பொழுதுகளில்… கனவுகளில் தோயாத கண்களும் உண்டோ.. கற்பனையில் வாழாத மனமும் உண்டோ..

கனவுகளும்., கற்பனைகளும் இணையும் மையப்புள்ளி சில வேளைகளில் காகிதமாய்.. கிழித்தெறிய முடியாத பக்கமாய் நம் வாழ்க்கைப் புத்தகத்தில்.. இணைந்தே இருக்கும்.

ஒவ்வொரு முறை பொழியும்போதும் மழை புதிதுதான்.. எத்தனையோ உள்ளங்களில் வசப்பட்டிருந்தாலும் காதல் புதிதுதான்..
காதல்..

கடக்க இயலா பேராழி.. அதில் போராளியாய் மாறி முத்தெடுத்தவர்களும் உண்டு.. மூச்சை விடுத்து மூழ்கிப் போனவர்களும் உண்டு..

கனவுகள் + கற்பனைகள் = காகிதங்களில் ‘கவிஞர் மீரா’ முத்தெடுத்தாரோ என்னவோ அவரின் கவிதைகளில் நாம் மூழ்கிப் போவது நிச்சயமே.. இந்த தொகுப்பை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதிதாய் உணரச் செய்யும் வலிமை கவிஞர் மீராவின் கவிதைகளுக்கு உண்டு. இந்த கவிதைத் தொகுப்பு 1971இல் வெளிவந்திருக்கிறது. அதன்பின் பலமுறை இத்தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்கள்… – kanavugal karpanaigal kakithangal puthaga vimarsanam

ஆரம்பமே மிகவும் வித்தியாசமாக… முன்னுரையாக முடிவுரையை எழுதியிருக்கிறார்.

நீ வந்தபோது என் வாழ்வுக்கு முன்னுரை
எழுத வந்திருக்கிறாய் என்று கருதினேன்;
நீயோ முடிவுரை எழுத வந்திருக்கிறாய்.

=> நீ பறக்கப் பார்க்கிறாய்; நான் கூண்டுக்குள்
அடைபட்டு நிற்கிறேன்…
என்று காதலின் வலியை நமக்கும் பகிர்கிறார்.
உனக்கென்ன-
போகிறாய்…போகிறாய்…
என் ஆன்மாவல்லவா,
அனிச்சமாய்
உன் அடிகளில் மிதிபடுகிறது..
உயிரின் வலியை உணர்த்தும் வரிகள்..

என் வீட்டு முற்றத்தில் பெய்யும் மழை
உன் வீட்டு முற்றத்திலும் பெய்கிறது.

என் தோட்டத்தில் பாடும் குயில்
உன் தோட்டத்திலும் பாடுகிறது.

என் கண்ணில் படும் நிலா
உன் கண்ணிலும் படுகிறது
.

என் இதயத்தில் நுழையும்
காதல் மட்டும்
உன் இதயத்தில் நுழையவில்லையா?..

என்று இயற்கையையும் காதலையும் இணைத்து இதயத்தை அசைத்துப் பார்க்கிறார்.

சாளரத்தின் வழியாகப்
பரந்த உலகத்தைப் பார்த்துப்
பெருமூச்சுவிடும்
ஒரு சிறைக்கைதியைப் போல
நெடுநேரம்
அப்படியே நின்றேன்..

தப்பவும் முடியாத.. தவிர்க்கவும் முடியாத இன்பமும் துன்பமும் கலந்த வலி அது.. எனினும் மிகவும் வலியது.. 

=> குறைந்த அளவு
நீ இந்த வரத்தையாவது கொடு.
நீ என்னைக் கைபிடிக்க வேண்டாம்;
காதலித்தால் போதும்.


நீ என்னைக் காதலிக்கக்கூட
வேண்டாம், வேண்டாம்;
அன்பு காட்டினால் போதும்.

நீ என்னிடம்
அன்பு காட்டாவிட்டாலும் பரவாயில்லை.
என்னை வெறுக்காமல் இருந்தால் போதும்.


குறைந்த அளவு
நீ இந்த வரத்தையாவது கொடு..

பிரிவின் தவிப்பில் தகிக்கும் வார்த்தைகள்.. வரம் வேண்டி தவிக்கும் பக்தனாய் காதலில் உருகி வழியும் வரிகள்.. 

ஏதாவது
விட்டு விட்டுப் போகிறாயா?”
என்கிறார்கள்.


நான் சொல்கிறேன்;
அவளும் நானும் சந்தித்த-
அழகுகள் கூடிக் குலாவும்-
அந்தப் பாதையை விட்டுச் செல்கிறேன்


அந்தப் பாதை நெடுக
நாங்கள் நடக்கும்போது
குளிர்ந்த நிழலையும்
கூடவே பூக்களையும் காய்களையும்
தூவிக் கொண்டிருந்த
வேப்பமரங்களை விட்டுச் செல்கிறேன்…
அந்தப் பாதையிலே வளர்ந்த
வசீகரமான கனவுகளையும்
கற்பனைகளையும்
விட்டுச் செல்கிறேன்”
நான் புறப்படுகிறேன்..

என்ற வரிகளில் நினைவுகளை மேகங்களாய் கடத்திச் செல்லும் வித்தையை கையாண்டிருக்கிறார் கவிஞர்.. மேகங்கள் பொழிகிறது

இப்போது மழை கண்களிலும்..
ஓர் ஆன்மாவின் யாத்திரை அடங்கப் போகிறது.
ஒரு தேவகானம் ஒடுங்கப் போகிறது.
ஒரு மன்மதப் பந்தல் சரியப் போகிறது.
ஒரு தூய கலைத்திரையில்
ஓடிக் கொண்டிருந்த
ஊமைப் படம்
முடியப் போகிறது…
முடியப் போகிறது..

இந்த வரிகளைப் படிக்கையில் மௌனமான வலி நம்முள் பரவுகிறது..

உலக பந்தம் என்னும் ஒரு சக்தியின் பிடியிலிருந்து மீற முடியாமல் – அதே நேரத்தில் மீற வேண்டும் என்னும் வேகத்தையும் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் ஓர் ஆன்மா, ஒரு தெய்வாம்சம் பொருந்திய பேரழகை அள்ளி அணைக்கும் ஆர்வ வெறியில் அலைகிறது ஆனால் – அந்தப் பேரழகு அதன் கைகளில் சிக்காமல் நழுவுகிறது. ஆன்மா துடிக்கிறது. அந்தத் துடிப்பின் அலை ஓசைகளை இங்கே கேட்கலாம்..

நினைவின் அலைகள் நமை தழுவித்தழுவி உயிர் நனைத்துச் செல்கிறது.. நனையும் பொழுதினில் கரையும் உயிரோ.. காதலின் கடலில் கலக்கிறது..
அருமையானதொரு கவிதை தொகுப்பு.. கவிஞர் இதில் ஒரு காதல் சாம்ராஜ்யமே படைத்திருக்கிறார்.. அவர் கவிதையுள் விஞ்ஞானமும்., ஏகாதிபத்தியமும்., பொதுவுடைமையும் கலந்தே இருக்கிறது..
காதலை மென்மையாகவும்.. மிகவும் மேன்மையாகவும் சொல்லியிருக்கிறார்.. அவரின் இந்த படைப்பை வாசிக்காதோர் இருக்க முடியாது.. எனை கவர்ந்த இந்த காவியத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. – kanavugal karpanaigal kakithangal puthaga vimarsanam
காதல் இருக்கும் வரை அவரின் கவிதைகளும் இருக்கும்..

– ப்ரியா பிரபு

You may also like...

14 Responses

  1. Kavi devika says:

    அருமையான விமர்சனம். வாழ்த்துகள்

  2. Rajakumari says:

    விமர்சனம் நன்றாக இருக்கிறது

  3. தி.வள்ளி says:

    விமர்சனம் அருமை… கவிதை கடலில் மூழ்கி முத்தெடுக்க செய்துவிட்டார்… அவர் எடுத்தாண்ட வரிகளே நூல் சிறப்பை கூறுகிறது. ஆசிரியருக்கு விமர்சன ஆசிரியருக்கும் வாழ்த்துக்களும் ,பாராட்டுக்களும் …

  4. Renu says:

    பிரியா பிரபுவின் வார்த்தைகளில் நான் படிக்காத அந்த கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் புத்தக்கத்தைப் படித்து விட்டேன்.

  5. ரிஷபன் says:

    கவிதை எழுத வருபவர்களை ஈர்த்த தொகுப்பு. எத்தனை வருடங்கள் ஆயினும் அதே மாறா இளமை வரிகள்.
    ரசித்து எழுதிய ப்ரியா பிரபு அவர்களுக்கு வாழ்த்துகள்

  6. Ramalaxmi says:

    Superb

  7. ssprabhu ssp. says:

    மிகச் சிறப்பு…காதல்_கவிதை,,
    மேலும் கவிதையாய் விமர்சனம்.

  8. Mageshbabu N Mageshbabu N says:

    Good

  9. உஷாமுத்துராமன் says:

    அருமையான விமர்சனம். பாராட்டுக்கள்

  10. ப்ரியா பிரபு says:

    வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..

  11. ஸ்ரீராம் ப says:

    சிறப்பான விமர்சனம்… கதை ஆசிரியர் ம விமர்சன ஆசிரியருக்கும் பாராட்டுக்கள்…

  12. Parvathy says:

    Akka super நான் அந்த கவிதை தொகுப்பு படித்ததில்லை ஆனால் நீங்க கூறிய விமர்சனம் அந்த கவிதை தொகுப்பு படித்தது போல் இருந்தது ….. வாழ்த்துக்கள் அக்கா

  13. Parvathy says:

    Super akka

  14. Kaleeswari says:

    Very nice explanation … Superb… Congratulations ….. Keep it up …✍️✍️