கவிதை தொகுப்பு 52

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் கோவை ம.கோ (மகேஸ்வரன்) மற்றும் சென்னை ராகவன் அவர்களை அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 52

கவிதை தொகுப்பு – 52

புத்தகம் ஓர் ஆயுதம்

செல்லவியலா இடங்களில்
நுழைவுச்சீட்டு..

பார்க்கவியலா மனிதர்களை
சந்திக்க வைக்கும்..

சிந்தனையில் உதயமாகி
காகிதச் சித்திரத்தில்
அழிவில்லாத ஓவியம் !

கற்பனையில் எட்டாத உச்சத்திற்கு
அழைத்துச் செல்லும் மயிற்பொறி..

வாசிப்போர் பாராட்டி மகிழும் கணம்
பிரசவித்த தாயின் மகிழ்வை ஈட்டித்தரும்..

வண்ணமில்லா வாழ்வையும்
மிளிரச்செய்யும் மரகதவீணையது..

படைப்பாளியை கலைஞனாக்கி
கலைஞனை காவியனாக்கும்…

ஆம் புத்தகம் எதையும் செய்யும்

– நீரோடை மகேஸ்


மௌனம் பேசினால்

பேசாத வார்த்தைகள் தேடி..
கலையாத கனவைக் கண்டு..
விடியாத பொழுதுகள் சேர்ந்து..
தொலையாத நினைவாய் மாற்றி..
துதிபாடும் மாயங்கள் செய்து..
மெல்ல நடைபோட வாய்ப்புகள் கேட்டு..
திசை மாறாத அன்பை வேண்டி..
பகை கூடா பண்பை கோர்த்து..
திகட்டாத காமம் கொண்டு..
கணம் சேரா புகழ்கள் போர்த்தி..
வர்ணஜால வார்த்தைகள் இன்றி
கொஞ்சம் வாய் திறந்து பேச நினைத்தால்…!
அந்த மௌனம் கூட மறந்து மௌனம் ஆகி..
மரத்து போகிறேன் நம் மௌன யுத்தத்தில்..!

– மணிகண்டன், சுப்பிரமணியம்


தமிழ் செம்மொழி

இயல் இசை நாடகம் முத்தமிழ் ஆகும்
வட்டார வழக்கு தனிதன்மை ஆகும்
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை
சேர சோழ பாண்டியர் வளர்ந்த தமிழ் – kavithai thoguppu 52

இலக்கியம் ஆயிரம் உண்டு
இலக்கணம் நூறு உண்டு
கல்வெட்டுகளில் பொதிந்த மொழி
கடல் கடந்து வாழும் மொழி

நாட்டுபுற பாடல்களில் வளமை
பக்தி பாடல்களில் அருமை
நாடக பாடல்களில் இனிமை
திரைபட பாடல்களில் புதுமை

மழுலை தமிழ் ஆனாலும்
புலவர் தமிழ் ஆனாலும்
எழுத்து தமிழ் மாஞ்சுவை
பேச்சு தமிழ் தேன்சுவை

பலமொழி கலப்பு இருந்தாலும்
நகரமயமாகி அவசரம் இருந்தாலும்
வெளிநாடுகளில் பணி புரிந்தாலும்
தமிழ்மொழி போல இனிதாவது ஏதுமில்லை.

– ராகவன் சென்னை


கல்யாணப்பரிசு

காதலித்த காதலி பரிசாக
காதலித்து கல்யாணம் செய்பவனுக்கு…

வாழ்க்கை பரிசாக
வாஞ்சையாய் மனையாள் வாய்த்தவனுக்கு…

இணையே பரிசாக
நல்ல துணையாய் மனைவி பெற்றவனுக்கு…

வரதட்சணை பரிசாக
வாழ வக்கில்லாத மணமகனுக்கு …

வாலிபம் பரிசாக
வாளிப்பான வாழ்க்கை கிடைத்தவனுக்கு …

வருத்தங்கள் பரிசாக
வன்சொல்லும் வாழ்க்கைத்துணை வாய்தவனுக்கு …

கல்யாணமே பரிசாக
காலம் கடந்து காத்துயிருப்பவனுக்கும் ,
முற்றி முதிர்கன்னியாய் முடி நிரைத்தவளுக்கும்,
கைம்பெண்ணாய் காலத்தை தொலைத்தவளுக்கும்…

ஆம் கல்யாணம் என்பதே பரிசு தான்
எதிர்பார்ப்பில் ஏமாற்றம் கொள்ளும் ஏனைய மக்களுக்கு …

– மகேஸ்வரன் கோ, கோவை


அன்பாய் நீ இருந்தால்

அன்பாய் நீ இருந்தால்
அழகாய் தெரிவாய் உன்
அன்பை பெறுபவருக்கு

நம்பிக்கையோடு
நீ நடந்தால்
நல்லவனாய் தெரிவாய்
உன்னை சார்ந்தவருக்கு

உழைப்போடு என்றும்
நீ இருந்தால்
உயர்வாய் தெரிவாய்
உன்னை உற்று நோக்குபவருக்கு

இயற்கையோடு நீ
இணைந்திருந்தால்
இறைவனாய் தெரிவாய்
இல்லாதவருக்கு
இறைவனும் தெரிவார்
அவருருவில் உனக்கு

வாழ்வை இரசித்து
வாழ்ந்தால்
கஷ்டங்களெல்லாம்
இஷ்டங்களாகும்
கவலைகளுடனும்
கொஞ்சம் கபடியாட
தோன்றும்

– இரா.அன்புதமிழ்


பிரபஞ்சம் வென்றவள்

ஆயிரம் வானத்து நிலவுகள்
கூடி வந்தாலும்
வெல்ல முடியாத
பூமியின் தேவதை அம்மா !

அழவைத்து பார்த்ததில்லை
அழுதும் பார்த்ததில்லை !

நீயின்றி நிழலும்
சொந்தமில்லை,
நீயிருக்கையில்
பிரபஞ்சம் தூரமில்லை !

– நீரோடை மகேஸ்

You may also like...

2 Responses

  1. வீ.ராஜ்குமார் says:

    அருமை!
    அனைத்து கவிதைகளும்
    ஆழ்கடல் தேர்ந்த முத்துகள்! _ குறிப்பாக
    மணிகண்டன் பேசிய மெளனம் இன்னும்
    மூன்றடி சேர்த்திருந்தால் என்
    மூச்சு நின்றிருக்கும்!
    மல்லிகையென தொடுத்த சரம்
    அழகு!

  2. Kavi devika says:

    மிக அருமை. அறிமுக கவிஞர் களுக்கு வாழ்த்துகள்…