நாலடியார் (20) தாளாண்மை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-20

naladiyar seiyul vilakkam

பொருட்பால் – அரசியல்

20. தாளாண்மை

செய்யுள் – 01

“கோள் ஆற்ற கொள்ளாக் குளத்தின் கீழ் பைங் கூழ்போல்
கேன் ஈவது உண்டு கிளைகளோ துஞ்சும்
வாள் ஆடு கூத்தியர் கண்போல் தடுமாறும்
தாளாளர்க்கு உண்டோ தவறு”
விளக்கம்
நீரை மிகுதியாக கொள்ளாத ஏரியின் கீழ் உள்ள பயிரை போல, ஒரு முயற்சியுமின்றி சிலர், தம் உறவினர் தருவதை உண்டு அவ் வுறவினர் வறுமையுற்ற போது வேறு வழியின்றி சாவர். ஆனால் வாளின் மேல் கூத்தாடும் மகளிருடைய கண்ணைப் போல் இயங்கி, ஓடி ஆடி சுறுசுறுப்பாக உழைக்கும் முயற்சியுடையார்க்கு இத்தகைய பிழைபட்ட வாழ்வு உண்டாகுமோ?


செய்யுள் – 02

“ஆடு கோடு ஆகி நின்றதூஉம்
காழ் கொண்டகண்ணே களிறு அணைக்கும் கந்து ஆகும்
வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன் தான்
தாழ்வு இன்றி தன்னை செயின்”
விளக்கம்
அசையும் கொம்பாகி வழியில் நின்ற இள மரமும் வயிரம் கொண்ட உறுதி வாய்ந்த பெரிய மரமாக வளர்ந்த பின்னர், ஆண் யானையை கட்டும் தறியாகும். அதுபோல ஒருவன் தன்னை தாழ்ந்த நிலையில் இல்லாமல் முயற்சி செய்தால், அவனுடைய வாழ்வும் அப்படிப் பட்ட பெருமை உடையதாகும்.


செய்யுள் – 03

“உறு புலி ஊன் இரை இன்றி ஒரு நாள்
சிறு தேரை பற்றியும் தின்னும் – அறிவினால்
கால் தொழில் என்று கருதற்க கையினால்
மேல் தொழிலும் ஆங்கே மிகும்”
விளக்கம்
வலிமை பொருந்திய புலியும் தனக்குரிய இறைச்சி உணவு ஒருநாள் கிடைக்கவில்லை எனில் சிறிய தேரையை பிடித்து தின்னும் அதனால் அறிவினால் ஆராய்ந்து எந்த சிறிய தொழிலையும் அற்பமான தொழில் என்று எண்ண வேண்டாம்; அந்த அற்பமான தொழிலே முயற்சியால் உயர்ந்த தொழிலாக மேம்படும்.


செய்யுள் – 04

“இசையாது எனினும் இயற்றி ஓர் ஆற்றால்
அசையாது நிற்பதாம் ஆண்மை – இசையுங்கால்
கண்டல் திரை அலைக்கும் கானல் அம் தண் சேர்ப்ப
பெண்டுரும் வாழாரோ மற்று”
விளக்கம்
தாழையை அலைகள் அசைத்தற் கிடமான சோலைகள் சூழந்த கடற்கரையை உடைய வேந்தனே! மேற் கொண்ட ஒரு செயல் எளிதில் முடியாததாயிருப்பினும் தளராது முயன்று செய்வதே ஆண்மையாகும். எடுத்த காரியம் எளிதில் முடியுமானால் மென்மை தன்மை வாய்ந்த மகளிரும் அதனை முடித்து பெருமை அடைய மாட்டார்கள் எளிதான செயலை யாவரும் முடிப்பர். அதில் பெருமை இல்லை. கடினமான செயலை மெய் வருத்தம் பாராது கண் துஞ்சாது இடைவிடாது செய்து முடிப்பதே ஆண்மையின் பெருமையாம்.


செய்யுள் – 05

“நல்ல குலம் என்றும் தீய குலம் என்றும்
சொல் அளவு அல்லால் பொருள் இல்லை – தொல் சிப்பின்
ஒண் பொருள் ஒன்றோ தவம் கல்வி ஆள்வினை
என்று இவற்றால் ஆகும் குலம்”
விளக்கம்
நல்ல குலம் என்றும் தீய குலம் என்றும் கூறுவதெல்லாம் வெறும் சொல்லளவே ஆகும். அப்படி கூறுவதில் ஒரு பொருளும் இல்லை பழமையான சிறப்புடைய மிக்க பொருளும், தவமும், கல்வியும், முயற்சியும் என்னும் இந்த நான்கினால் நல்ல குணம் அமைவதாகும்.


செய்யுள் – 06

“ஆற்றும் துணையும் அறிவினை உள் அடக்கி
ஊற்றம் உரையார் உணர்வு உடையார் – ஊற்றம்
உறுப்பினால் ஆராயும் உண்மை உடையார்
குறிப்பின் கீழ் பட்டது உலகு”
விளக்கம்
தாம் மேற்கொண்ட செயலை அது முடியும் வரை அறிவின் திறத்தால் மனத்துக்குள் அடக்கிக் கொண்டு தன் முயற்சியினை வெளிப்படையாக உரையார் அறிவுடையார் மேலும் அவர்கள் பிறர் முயற்சியினை அவர்களது உறுப்புகளின் குறிப்பினால் அறிவர். இத்தகையோர் கீழ் அடங்கும் உலகு.


செய்யுள் – 07

“சிதலை தினப்பட்ட ஆலமரத்தை
மதலை ஆய் மற்று அதன் வீடு ஊன்றியாங்கு
குதலைமை தந்தை கண் தோன்றின் தான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும்”
விளக்கம்
கறையானால் அரிக்கப்பட்ட ஆலமரத்தினை அதன் விழுது தூணாக நின்று தாங்குவது போல தந்தையிடம் முதுமையால் தளர்ச்சி உண்டாகும் போது அவன் பெற்ற மகன் முன் வந்து பாதுகாக்க, தந்தையின் தளர்ச்சி நீங்கும்.


செய்யுள் – 08

“ஈனமாய் இல் இருந்து இன்றி விளினும்
மீனம் தலைவருப செய்பவோ – யானை
வரி முகம் புண் படுத்தும் வள்உகிர் நோன் தான்
அரிமா மதுகையவர்”
விளக்கம்
யானையின் புள்ளிகள் பொருந்திய முகத்தைத் தாக்கிப் புண்படுத்தவல்ல கூர்மையான நகங்களையும் வலிமையான கால்களையும் உடைய சிங்கத்தைப் போன்றே வலிமையுடையோர் வறுமையுற்று நிலை தாழ்ந்த போதும், மானம் கெடத்தக்க செயலை செய்வாரோ? செய்யார்.


செய்யுள் – 09

“தீம் கரும்பு ஈன்ற திரள் கால் உளை அலரி
தேம் கமல் நாற்றம் இழந்தா அங்கு – ஓங்கும்
உயர் குடியுள் பிறப்பின் என்னாம் பெயர் பொறிக்கும்
பேர் ஆண்மை இல்லாக்கடை”
விளக்கம்
இனிய கரும்பு ஈன்ற, திரண்ட காம்பினையுடைய, குதிரையின் பிடரி மயிர்போல, கற்றையான பூவானது நறுமணத்தை இழந்தது பொல, ஒருவனிடம் தன் பெயரை நிலைநாட்டும் பெருமுயற்சி இல்லாத போது, அவன் மிகச் சிறந்த குடியிலே பிறந்தால் மட்டும் என்ன பயன் உண்டாகும்.


செய்யுள் – 10

“பெரு முத்தரையர் பெரிது உவந்து ஈயும்
கருனைச் சோறு ஆர்வர் கயவர் – கருனையைப்
பேரும் அறியார் தனி விரும்பு தாளாண்மை
நீரும் அமிழ்து ஆய் விடும்”
விளக்கம்
முயற்சியற்ற கீழ்மக்கள், பெரு முத்தரையர் என்னும் சிறப்பு பெயர் பெற்ற செல்வர் மகிழ்ந்து தரும் கறிகளோடு கூடிய உணவை உண்டு மகிழ்வர். கறியின் பெயரையும் அறியாத மேலோர், தாம் விரும்பி செய்த முயற்சியால் ஆனது நீர் உணவாயினும் அதனை அமிழ்தமாக உண்பர் – naladiyar seiyul vilakkam-20.

– கோமகன்

You may also like...