பதஞ்சலி முனிவர்

பதஞ்சலி முனிவர் பதினெட்டு சித்தர்களில் ஒருவராக கருதப்படுகிறார். யோகக் கலையினை முறையாக வகுத்துக் கொடுத்தவர் என கருதப்படுகிறார். இவர் இயற்றியதாக சொல்லப்படும் பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது – patanjali munivar siddar.

patanjali munivar siddar

சிவனின் ஆனந்த தாண்டவமும் சித்தர் அவதாரமும்

ஓரு சமயம் ஆதிசேஷன் சிவனின் ஆனந்த தாண்டவத்தைக் காணவேண்டுமென கயிலை சென்று சிவனிடம் தன் ஆசையை வெளிப்படுத்தினார். அதற்கு சிவன் பூலோகத்தில், தில்லை வனத்தில் தான் காட்சியளிக்க உள்ளதாகவும், அதைக் காண ஏதுவாக அத்திரி மகசிரியின் மகனாக வளர்ந்து வருமாறு ஆதிசேசனை பணிக்கிறார். அத்திரி மகரிசி ஆற்றில் சந்தியா வந்தனம் செய்யும்போது ஐந்து முகங்களுள்ள ஒரு குழந்தையாக அவர் கைகளில் வந்து விழுகிறார். மகரிசியும் அந்தக் குழந்தையை எடுத்து பதஞ்சலி என்ற பெயரிட்டு வளர்க்கிறார்.

அத்திரி மகசிசியும், புலிகால் முனிவரும் சிவனின் ஆனந்த தாண்டவத்தைக் காண விருப்பம் கொண்டு தவம் செய்கின்றனர். அப்போது பதஞ்சலியும் அவர்களுடன் சேர்ந்து தவமியற்றினார். இவர்களின் தவத்தற்கு இரங்கிய ஈசன் ஒரு வியாழக் கிழமையுடன் கூடிய தைப்பூச நாளில் இவர்களுக்கு ஆனந்த தாண்டவத்தைக் காட்டி அருள்கிறார். இந்த பதஞ்சலி முனிவர் ஒரே நேரத்தில் ஆயிரம் சீடர்களுக்கு ஆயிரம் தலைகளுடன் திரை மறைவில் இருந்து வியாகரண மகாபாஷ்யத்தைக் கூறினார் என்று தொன்மங்கள் குறிப்பிடுகின்றன.

பதஞ்சலி யோகசூத்திரம்

பதஞ்சலி யோக சூத்திரங்கள் 1. சமாதி, 2. சாதனை, 3. விபூதி, 4. கைவல்யம் என்று நான்கு பாதங்களிலாக 196 சூத்திரங்கள் கொண்டது. யோக சூத்திரங்களின் முக்கியத்துவம் என்னவென்றால் பலகாலமாகவே ஒரு வழிமுறையாக கடைப்பிடிக்கப்பட்ட யோக முறைகளை வகுத்து தொகுத்து அளித்தமைதான் . அதைவிட முக்கியமானது ஒன்று உண்டு. யோக முறைகள் அவருக்கு முன்பாக ஏறத்தாழ எல்லா கருத்தியல்தரப்புகளாலும் பலவிதமாக கடைப்பிடிக்கப்பட்டன. பதஞ்சலியே அவற்றைத் தொகுத்து பொதுவான அம்சங்களை மட்டும் கொண்டு யோகம் என்ற தனித்த அமைப்பை உருவாக்கினார் . அம்மரபு எந்த மதத்துக்கும் சொந்தமில்லாமல், அதே சமயம் அனைத்து மதத்துக்கும் பொதுவானதாக இருக்கும்படி அமைத்தது அவரது சாதனையே. ஒற்றை வரியில் சொல்லப்போனால் ‘மதசார்பற்ற புறவயமான நிர்ணயங்களாக’ யோக சூத்திரங்களை அமைத்ததே பதஞ்சலி முனிவரின் பங்களிப்பாகும்.

பதஞ்சலி சித்தர் பிறந்த மாதம் : பங்குனி
பதஞ்சலி சித்தர் பிறந்த நட்சத்திரம் : மூலம்
பதஞ்சலி சித்தர் வாழ்ந்த காலம் : 5 யுகம் 7 நாட்கள்
பதஞ்சலி சித்தர் குரு : நந்தி
பதஞ்சலி சித்தர் சீடர் : கௌடபாதர்
பதஞ்சலி சித்தர் ஜீவசமாதி அடந்த தலம் : சிதம்பரம்.

பதஞ்சலி சித்தரின் பதினாறு போற்றிகள்

  1. ஒரு நிலைப்பட்ட மனதை உடையவரே போற்றி!
  2. ஆதி சேஷனின் அவதாரமே போற்றி!
  3. ஒளிமயமானவரே போற்றி!
  4. மந்திரத்தின் உருவமானவரே போற்றி!
  5. கருணாமூர்தியே போற்றி!
  6. கடும் விசக்காற்று மூச்சுடையவரே போற்றி!
  7. பூலோகச் சூரியனே போற்றி!
  8. ஞான வழிகாட்டுபவரே போற்றி!
  9. பேரும் புகழும் உடையவரே போற்றி!
  10. இன்மொழி பேசுபவரே போற்றி!
  11. இகபரசுகம் தருபவரே போற்றி!
  12. மகாவிஷ்ணு பிரியரே போற்றி!
  13. அஷ்டமா சித்திகளையுடைவரே போற்றி!
  14. அங்ஞானம் அகற்றுபவரே போற்றி!
  15. யோக சூத்திரம் அருளிய யோகியே போற்றி!
  16. யோகங்கள் அனைத்தையும் தரும் பதஞ்சலி முனிவரே போற்றி!

பதஞ்சலி முனிவரின் பூஜையின் பலன்கள்

  1. ஜாதகத்தில் உள்ள வியாழ கிரக தோஷ நிவர்த்தியுண்டாகும்
  2. குடும்ப ஒற்றுமை உண்டாகும்
  3. செல்வம் பெருகும், மகிழ்ச்சியுண்டாகும்
  4. எலும்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமடையும்
  5. நன் மக்கட்பேறு உண்டாகும்
  6. கல்விக்கலைகளில் சிறந்து விளங்குவார்கள்
  7. தடைகள் நீங்கி எல்லாவற்றிலும் வெற்றியுண்டாகும்
  8. உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும்
  9. எல்லா நலன்களும் சூழ இன்புற்று வாழ்வார்கள் – patanjali munivar siddar

You may also like...

1 Response

  1. Kavi devika says:

    நன்மை நடக்கட்டும் சித்தர் அருளால்