விழியோர கனவுகள்

கதைக்கரு: இரண்டாம் நூற்றாண்டில் இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகார நூலில் அமையபெற்ற புகார்காண்டத்திலுள்ள இளவேனிற்காதை பகுதியில் கோவலன் மாதவியை பிரிந்து கண்ணகியை சேர்கிறான். அப்போது மாதவி தன் தோழியை தூதனுப்ப கோவலன் வரமறுத்து கண்ணகியுடன் மதுரை செல்வதாக கதை நகர்கிறது. இதையே என் கதைக்கருத்தாக கொண்டு இக்கதையை எழுதியுள்ளேன் [கவி தேவிகா, தென்காசி] – vizhiyora kanavugal sirukathai.

vizhiyora kanavugal sirukathai

கைகளில் கோபால் எழுதிய கடிதம், கண்ணீர் வழியும் இரு கண்கள், இமைமூடி சாய்ந்து, பசியால் அழும் தன் ஆறுமாத குழந்தை மேகலைக்கு என்ன செய்து பசியாற்ற என்பதறியாமல் நிந்திக்கிறாள் தன் தலைவிதியை …. என்ன செய்வாள் அவள்… இப்படி ஒரு அவல நிலைக்கு தள்ளப்படுவாள் என அவள் நினைக்கவேயில்லை.

அழகிய கனாகாலம்

சத்தமிட்டு அழும் குழந்தை, மௌனமாக அழுதுகொண்டிருக்கும் அவளது மனம், இரண்டுக்குமிடையில் தத்தளிக்கும் நிகழ்கால பாவையவள். அழும் குழந்தைக்கு பால் புகட்டி தூங்க வைக்கிறாள், அவள் மனதை சமாதானபடுத்த வழி யில்லையென்பதால்……. பசியாறிய குழந்தை மேகலை தூங்க ஆரம்பிக்க, அவளது இரு விழிகளும் கண்ணீர் குளத்தில் மீனாக தன் கடந்த காலத்தில் நீந்துகிறாள்.

ஆம், அது ஒரு அழகிய கனாகாலம். இளமை பருவத்தில் காதல் வயப்பட்டு, கொஞ்சல்களோடும், கெஞ்சல்களோடும் உலா வந்த இளவேனிற் காலம். அன்று தான் ( சரியாக மூன்று வருடத்திற்குமுன் ) இதே நாளில் தனது ஊர்த்திருவிழாவில் கோபாலை சந்தித்தாள் மதுரா முதன் முதலாக… மதுரா திருவிழாவுக்காக தன் பாட்டி ஊரான வயற்காட்டிற்கு மேகனூரிலினுந்து தன் பெற்றோருடன் வந்திருந்தாள். அதே போன்று கோபால் தன்னவளை கூட்டிக்கொண்டு வந்திருந்தான் – vizhiyora kanavugal sirukathai.

மதுரா தன் பெற்றோரின் ஒரே செல்ல மகள். மேகனூரில் படித்து முடித்து விட்டு தற்போது திருமணத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கும் நடுநிலை செல்வந்தர் வீட்டு பெண். கோபால் அத்திபுரத்தில் தன் தந்தையுடன் சேர்ந்து சொந்த வணிகம் செய்து வருகிறான்.

முதல் திருமணம்

மூன்று மாதங்களுக்கு முன்பு தான் வியாபார உடன்படிக்கையாக அவனது தந்தை திருமணமென்ற பெயரில் அவனுக்கு நடத்தி வைத்தார். தன் விருப்பத்தை எதிர்த்து கூற வழியின்றி அந்த திருமணத்தை செய்து கொண்டான். கோபாலின் மணையாள் கயல்விழி, படிக்கதவள் எனினும் பண்பானவள். கோபால் தந்தையின் வியாபார நண்பரின் மகள். வசதிபடைத்தவள் எனினும் தன் தந்தை சொல்லே வேத வாக்கு அவளுக்கு.

அவளோடு திருமணமான இந்த மூன்று மாத காலத்தில் பெரிதாக கோபாலை கயல்விழி ஈர்க்கவேயில்லை. காரணம் அந்த திருமணம் அவனது விருப்பமின்றி தடந்தேறியதால், மற்றபடி கயல்விழியை கோபாலுக்கு பிடிக்காமலில்லை ஆயினும் அவனால் அவளை மனைவியாக ஏற்றுகொள்ள முடியவில்லை. தற்போது திருவிழாவில் மதுராவை பார்த்ததும் காதல் வயப்படுகிறான். பார்த்ததும் பிடித்து போயிற்றுகோபாலுக்கு.

காதல் அரங்கேற்றம்

மதுராவுக்கும் அப்படித்தான். இருவருக்கும் ஏதோ இரசாயன மாற்றம். காதலித்து நன்கு பழகிய நான்கு நாள் திருவிழாவில் அவன் ஏற்கனவே மணமானவன் என தெரிந்திருக்கவில்லை மதுராவுக்கு. அவனை பற்றிய முக்கிய விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்ளும் மனநிலையிலும் இல்லையவள். எல்லாம். காதல் நடத்தும் அரங்கேற்றம் போலும் – vizhiyora kanavugal sirukathai.

திருவிழா முடிந்ததும் இருவரும் ஊரைவிட்டு கிளம்ப, ஒருவரையொருவர் பிரிய முடியாத துயரத்தில் சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் இருவரும் தனியாக ஊரைவிட்டு சென்று திருமணம் செய்து கொண்டு நல்வாழ்வு தொடங்கலாம் என முடிவு செய்து அதற்கான நாளொன்றையும் உறுதிசெய்துவிட்டு அவரவர் ஊருக்கு சென்று விடுகின்றனர். தன் மண வாழ்விற்கு தேவையான அனைத்தையும் தயார் செய்து வைத்தான் கோபால். முன்னமே குறிப்பிட்ட அதேநாளில் மதுராவை கரம்பிடித்தான்.

குற்ற உணர்வு

தன் வீட்டிற்கு அழைத்து செல்லும்வரையில் தெரியவில்லை மதுராவுக்கு தனக்கொரு பேரதிர்ச்சி காத்திருக்கிறதென்று. கோபால் ஏற்கனவே மணமானவன் என்றும் அதில் அவனுக்கு உடன்பாடில்லை என்றும் மதுரா தெரிந்து கொண்டாள். ஒரு பெண்ணின் வாழ்வை பாழ்படுத்திய குற்ற உணர்வு ஒருபக்கம், தன் ஆசை காதல் கிடைத்துவிட்ட மகிழ்வு ஒருபக்கம் , எப்போதும் இப்படி இக்கட்டில் விடுவதுதான் பெண்ணிற்கு விதிக்கப்பட்ட சாபம் என
கலங்கிநிற்கிறாள்.

மிகப்பெரிய பிரளயத்தை எதிர்நோக்கியவளுக்கு மயான அமைதியை கண்டு வியப்பு. கோபாலின் தந்தை ஒரு காகிதத்தில் அவனுடைய கையெழுத்தை பெற்று கொண்டு சில ரூபாய் நோட்டு கட்டுகளை அவனிடத்தில் தந்துவிட்டு இனி நீ வெளியே செல்லலாம் என்று உரக்கக் கத்தினார். என்ன நடக்கிறதென்பதே யறியாமல் இதழ்மூடி மௌனமாய் மதுராவும் பின் தொடருகிறாள் தன் மணாளனை.

தொழிலில் முடக்கம்

பக்கத்து ஊரான சாத்தனூரில் புது வாழ்வை துவங்குகின்றனர் இருவரும். கோபால் தனக்கென சிறு தொழிலை உருவாக்கி சம்பாதித்து வந்தான். இருவரும் ஈருடல் ஓருயிராய் இன்பத்தோடு இல்லறத்தை நல்லறமாகவே நடத்தி வந்தனர். நாட்கள் நகர்ந்தது தெரியவில்லை இருவருக்கும். ஒரு வருடம் ஓடிய பிறகு மதுரா தாய்மையுற்றாள். கோபால் அவளை கொண்டாடி மகிழ்ந்தான். சேயை பார்ப்பது போல் அவளை கண்கலங்காது காத்து வந்தான்.

தன் பெற்றோரை நினைத்து மதுரா வருந்தும்போதெல்லாம் அவளை தேற்றி ஆறுதல் கூறுவான். ஓர் நல்ல நாளில் மேகலையும் பிறந்தநாள். நன்றாக சென்று கொண்டிருந்த வாழ்வில் கடந்த ஆறு மாத காலமாக நிறைய ஊடல்கள்
இருவருக்குள்ளும்.

கருத்து வேறுபாடுகள்

கோபால் செய்துவந்த தொழிலில் சற்று முடக்கம் ஏற்படவே என்ன செய்வதென அறியாது நிறைய கடன் சுமைக்கு ஆளாகிறான் . இதுபற்றிய ஒரு விஷயங்களையும் மதுராவிடம் கூறவேயில்லை. பொருட்தேவை அதிகரிக்க இருவருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் ஆரம்பிக்கிறது. மதுரா கோபாலுடன் திருமணம் செய்ய வரும்போது தன்னுடைய உடைமகளாக எதையுமே தன் வீட்டிலிருந்து எடுத்து வரவில்லை. கட்டிய சேலையுடன் கோபாலை நம்பி வந்தாள். ஆனால் கயல்விழியோடு மணம் நடந்த போது கோபாலுக்கு வந்த சீர்கள் ஏராளம். அவனே அந்த சீர்களைக் கண்டு வியந்திருக்கிறான்.

தந்தையுடன் சந்திப்பு

தற்போது ஏற்பட்ட மனவேதனையின் காரணமாக கோபால் இவ்வாறு ஒப்பிட்டு பார்த்து பேசுவதை மதுராவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் பிரச்சனைகள். அதிகமாக சில நாட்கள் அவன் இரவு வீட்டுக்கு வருவதேயில்லை. ஏனென்று காரணம் கேட்டதற்கு சரியான பதில் எதுவுமில்லை அவனிடமிருந்து. கோபால் தனது தந்தையை சென்று சந்தித்து வருவதாக கேள்விப்பட்டு மதுரா கலக்கமடந்தாள். மீண்டும் அவன் சந்திப்பதை அவள் கண்கூடாக பார்த்ததும் உள்ளம் பதைபதைக்கிறது. அவள் பயம் நியாயம் தானே.

தன் மணாளன் தன்னை விட்டு முதல் மனைவி கயல்விழியிடம் சென்று விடுவார் என்ற அச்சம். மனதிற்குள் தீர்மாணிக்கிறாள் தன் பெற்றோரை அணுகி பொருட்தேவையைக்கூறி ஏதாவது பெற்று கொண்டு தன் மணாளன் தன்வசம் மீட்டெடுக்க வேண்டும் என்று. ஆனால் விதியோ அதிவேகமாக செயல்பட்டது.

நேசித்து பொய்யா

அவள் தீர்மானித்த அன்றிரவே கோபாலுக்கும் அவளுக்கும் யுத்தமே நடந்தது. அந்த யுத்தத்தில் கோபத்தில் மதுரா தன்னை நேசித்து எல்லாம் பொய்யா. என்னை மறந்து உங்கள் முதல் மனைவியோடு சென்று விடுவீர்களா? இல்லை என்னை ஏமாற்றி அவளோடு ஏற்கனவே தொடர்பிலிருக்கிறீர்களா என்று வினவ கோபம் தலைக்கேறி மதுராவை கடிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான். சண்டையின் வேகம் குறைந்து தன் நிலை அடைய
இரண்டு தினங்கள் ஆயிற்று.

மதுரா தன் பெற்றோரை பார்த்து நடந்தவற்றை கூற வேண்டுமென்ற முடிவில் காலையில் அவசரமாக கிளம்புகிறாள் அப்போது தான் மேசையின் மீது காற்றில் ஆடிக்கொண்டிருக்கும் காகிதம் கண்ணில் பட்டது. ஆம் அது கோபாலின் கையெழுத்துதான். அவள் மனம் நினைத்தது போலவே கோபால் அவளை விட்டு நீங்குவதாகவும், அவள் வாழ்வில் இனி அவனில்லை என்பதையும் தெளிவாக எழுதி வைத்துவிட்டு சென்றுவிட்டான். எத்தனை மணி நேரமாக தன்னை மறந்து பழைய நினைவுகளில் மூழ்கியினுந்தாள் என்று தெரியாது உறக்கத்திலிருந்து விழித்த மேகலை பொக்கை வாய் திறந்து சிரித்து கொண்டிருந்தாள்.

மதுராவின் இதழ்களும் வெறுப்பு புன்னகை வீசியது இன்றைய அவளின் நிலையை நினைத்து. இனி என்ன செய்ய என்பது அடுத்த கேள்விக்குறியாக…???????

தந்தையிடம் தஞ்சம் புகுந்தான்

இவ்வுலகை வாழ்வை புறக்கணித்து உயிர்விட மனமில்லை. அவள் செய்த தவறுக்கு மேகலையை தண்டிப்பது எவ்விதத்திலும் நியாயமில்லை. யோசித்தாள். பிறகு உறுதியாக ஆம் இது வே சரியான முடிவு என்று தனக்குள் தீர்மானித்து அதை நோக்கி தன் வாழ்க்கை பயணத்தை புதிதாக தொடர்ந்தாள்

மதுராவை விட்டு தன் தந்தையிடம் தஞ்சம் புகுந்தான் கோபால். முன்பிருந்த பாசம் அன்போ தந்தையிடம் இப்போது இல்லாமல் போகவே தயங்கி மெல்ல கயல்விழியை எங்கே என கேட்கிறான். நீ விட்டு சென்றதால் கயலின் தந்தைக்கும் எனக்குமிரருந்த நட்பு பிரிந்தது. வியாபாரத்திலும் நஷ்டம். கயல்விழி அவளது வீட்டிற்கு சென்றுவிட்டாள் – vizhiyora kanavugal sirukathai.

உன்னால் ஏற்பட்ட மன உளைச்சல் ஏராளம். நீ பட்ட கடனை நான் பெற்ற கடனுக்காக அடைத்துவிட்டேன். இனி உன் வழியை பார் என்று அவனை முற்றிலும் நிராகரித்தார். இதை சற்றும் எதிர்பாராத கோபால் கயல்விழியை நாடி சென்றான். எப்படியாயினும் அவள் தன் மணையாள் தன்னை ஏற்பாள் என்ற நம்பிக்கையோடு சென்றான்.

துறவற கோலத்தில்

ஆனால் கயல்விழி அவளது பெற்றோருடன் இல்லை. அவளது தந்தை.அவளுக்கு மறுமணம் செய்வித்து பட்டணம் அனுப்பி வைத்ததாக அங்கம் பக்கத்து வீட்டார் கூற அதிர்ச்சியோடு நின்றான். திக்குகள் தெரியாது தலை சுற்ற வேறுவழியின்றி மதுராவை நாடி சென்றான். ஆனால் மதுராவும் அங்கில்லாதது கண்டு என்ன நேர்ந்திருக்கும் என அச்சப்படுகறான்.

ஏதேனும் தவறான முடிவிற்கு சென்றிருப்பாளோ என தேடி அலைந்து இறுதியில் பக்கத்து ஊரிலுள்ள மடத்தில் மயங்கி விழுகிறான். கண்விழித்து பார்த்தபோது மடத்திலுள்ள அறையில் படுத்திருப்பது தெரிந்தது. எழுந்து சென்று நடுகூடத்திற்கு வந்து பார்த்தவன் ஸ்தம்பித்து நின்றான். ஏனெனில் அவனெதிரே துறவறம் பூண்ட கோலத்தில் நின்று கொண்டிருந்தது வேறுயாருமல்ல மதுரா. மகிழ்ச்சியாக அவள் வாழ்ந்த காதல் வாழ்விற்கு கிடைத்த அற்புத பரிசு ……..

கருத்து :
விழிகளில் உதித்திடும் கனவுகள் எல்லோருக்கும் காட்சிகளாக கிடைப்பதில்லை. வழிந்தோடும் கண்ணீர் சொல்லும் ஆயிரமாயிரம் கனவுகள் மரணித்தத கதைகளை……..

You may also like...

4 Responses

  1. Rajakumari says:

    Kathai super nalla irukku

  2. Kasthuri says:

    புராணம் தழுவிய கதை அமைப்பு அருமை

  3. Rajakumari says:

    மனது கனக்கி றது கதையைப் படித்ததும்

  4. தி.வள்ளி says:

    வித்தியாசமான முயற்சி.. அருமையான நடை …,கதையின் தலைப்பு அருமை …பொருத்தமான படம்… மொத்தத்தில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது. பாராட்டுகள் சகோதரி